
கிளந்தான் மாநிலம் தானா மேரா மாவட்டம், கம்போங் புகிட் கெச்சிக் கிராமத்தில், முன்னோர் பயன்படுத்திய பண்டைய ‘பெராகு’ -நீளமான மரப் படகின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பு தேசிய பாரம்பரியத் துறையால் மிகுந்த வரலாற்றுப் பெறுமதி கொண்டதாகக் கருதப்படுகிறது.
பாரம்பரியத் துறை வெளியிட்ட புகைப்படங்களில், படகின் உடற்பகுதி சதுப்புநிலத்தில் சிக்கியிருப்பதையும் அதன் குறுக்குக் கட்டைகள் நீர்மட்டத்திற்கு மேல் தென்படுவதையும் காண முடிகிறது.

ஏறக்குறைய ஏழு மீட்டர் நீளமுள்ள இந்தப் படகின் ஒரு பகுதி அருகிலுள்ள ஆற்றில் மூழ்கிய நிலையில் உள்ளது.
தேசிய பாரம்பரியத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தப் படகு உள்ளூரில் வளர்ந்த உறுதியான மரங்களான செங்கல் அல்லது மெராந்தி போன்றவற்றால், பாரம்பரிய முறையில் மேற்கொள்ளப்பட்ட மர இணைப்பு, குறுக்கு விட்ட அமைப்பு போன்ற தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம்’ எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘இந்த அமைப்பு மலாய் படகுத் தொழிலாளர்களின் திறமையை வெளிப்படுத்துகிறது; ஆற்றின் நிலைமாற்றங்களுக்கு ஏற்ப கட்டுமானத்தைச் சீரமைத்துள்ளனர்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படகு கிளந்தானின் வரலாற்று அடையாளமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இதன் தொடர்பில் மேலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள பாரம்பரிய தேசிய ஆணையம், சம்பந்தப்பட்ட அனைத்தும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக, அன்றைய தானா மேரா சமூகத்தினர், போக்குவரவு-தகவல் தொட்ர்பு-வர்த்தகம்-வாழ்வாதாரம் என அனைத்திற்கும் ஆற்றையே ஆதாரமாகவும் மையமாகவும் கொண்டு வாழ்ந்திருக்கின்றனர் என்னும் தொன்மம் இந்தப் பாரம்பரிய ‘பெராகு’ படகு கண்டுபிடிப்பின்வழி புலப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


