
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த சிராவயல் என்ற ஊரில் தமிழரின் பாரம்பரியத்தையும் இளங்காளையரின் சாகசத்தையும் பறைசாற்றவல்ல ஏர்தழுவுதல் என்னும் மஞ்சுவிரட்டிப் போட்டி, பேரெழுச்சியுடன் இன்று ஏப்ரல் 17-ஆம் நாள் நடைபெற்றது.
தமிழகத்தின் தென்புலத்து அமைச்சரும் கூட்டுறவுத் துறையை வகிப்பவருமான மாண்புமிகு கே.ஆர்.பெரிய கருப்பன், இந்தப் போட்டியைத் தொடங்கிவைத்தார்.
சிராவயல் மொத்த ஊரும் அல்லோலகல்லோலப்படும் அளவிற்கு சுற்று வட்டாரங்களில் இருந்து ஏறக்குறைய ஒரு இலட்சம்பேர் திரண்ட இந்த மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளைகளை அடக்கமுயன்ற காளையரும் காளையரை விஞ்சிய காளைகளும் காண்போரைக் கவர்ந்தனர்; கவர்ந்தன.
நூறு காளைகள் களத்தில் இறக்கப்பட்டன. இவற்றில், காளையரிடம் வசப்பட்ட காளைகளும் உண்டு; காளையரைப் பந்தாடிய காளைகளும் உண்டு.
இத்தகைய துள்ளலான மகிழ்ச்சியை மட்டுப்பட வைத்தன மூன்று உயிர்கள். ஒரு வீரர், காளையின் தாக்குதலுக்கு ஆளாகி இறந்தார். ஒரு காளை தறிகெட்டு ஓடியதால் நீரில் பாய்ந்து இறந்தது; அக்காளையைக் காப்பாற்ற முயன்ற அதன் உரிமையாளரும் தண்ணீரில் மூழ்கினார்.


