
தலைநகரிலுள்ள தித்திவாங்சா மண்டபத்தில் 25ஆவது மைலோ பன்னாட்டு கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி தற்பொழுது சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியின் தொடக்க விழா இன்று நடைப்பெற்ற வேளையில் அதனை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் அமிடி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இந்தப் போட்டியில் மொத்தம் 1,850 கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 350 சர்வதேச வீரர்களும், 1,500 உள்ளூர் வீரர்களும் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வயது – எடை அடிப்படையில் பல பிரிவுகளில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டி, பன்னாட்டு நட்புறவை வலுப்படுத்துவதோடு, கராத்தே விளையாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பை வழங்குகிது.
புத்ராஜெயா கராத்தே சங்கத் தலைவர் தியாகு பொன்னையா தலைமை உரையாற்றியபோது இத்தகவலை வழங்கினார்.
பொ. தியாகுவின் தலைமை உரையை தொடர்ந்து, துணை பிரதமர்
டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் அமிடி, சிறப்புரையாற்றி இந்த வெள்ளி விழா நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்க வைத்தார்.

25ஆவது மைலோ சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ள மலேசிய வீரர்கள் முழு பலத்துடன் போட்டியிட்டு, அனைத்துலக அரங்கில் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் சாதனை படைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இப்போட்டியில் 17 நாடுகளைச் சேர்ந்த 350 அனைத்துலக வீரர்கள் கலந்து கொண்டிருப்பது போட்டியின் உயரிய தரத்தையும் சிறப்பையும் வெளிப்படுத்துவதாகக் கூறினார்.
மேலும், போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்ளூர் வீரர்களையும் அவர் வரவேற்ற அதேவேளை, விளையாட்டின் மூலம் நாடுகளுக்கிடையிலான நட்புறவும் ஒற்றுமையும் மேலும் வலுப்பெற வாழ்த்தும் தெரிவித்தார்.

தொடர்ந்து, மைலோ பன்னாட்டு வெள்ளி விழா கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
பள்ளிகளில் தற்காப்புக் கலைகளுக்கு அங்கீகாரம் அவசியம்
கராத்தே அனைத்துலக போட்டியின் வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற சாம்பியன்ஷிப்பில் மொத்தம் 106 அணிகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தின.

இந்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றவர்களில் 99 விழுக்காட்டினர் பின்னர் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களாக உருவாகியிருப்பது இப்போட்டியின் சிறப்பை எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த பொ. தியாகு, மாணவர்களிடையே தற்காப்புத் திறனையும் ஒழுக்கத்தையும் வளர்க்கும் நோக்கில் தொடக்கப் பள்ளியிலேயே கராத்தே, சீலாட் உள்ளிட்ட தற்காப்புக் கலை விளையாட்டுகளுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும், அவற்றை கட்டாய விளையாட்டாக அறிமுகப்படுத்தினால் மாணவர்கள் அதிக அளவில் தற்காப்புக் கலைகளில் ஈடுபடுவதுடன், எதிர்காலத்தில் மேலும் பல தேசிய வீரர்கள் உருவாகும் வாய்ப்பும் அதிகரிக்கும் என்று வலியுறுத்தினார்.




