
நோர்வே நாட்டின் Aftenposten பத்திரிகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ‘பாம்பாட்டி’ போல கேலிச்சித்திரமாக வெளியிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது இந்தியர்களிடையே, குறிப்பாக மோடி ஆதரவு ஊடக வட்டத்தில் பெரும் கொந்தளிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ளது;
தவிர, ‘காலனித்துவ மனப்பான்மை’ என்றும் ‘வெளிநாட்டு ஊடகங்களின் இனவெறிச் சித்திரம்’ எனவும் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்துள்ளது.
வெகு அண்மையில் அந்த நாட்டிற்குச் சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, அலட்சிய மனப்பான்மையுடன் நடந்து கொண்டதாக விமர்சனம் பரவலாக எழுந்த நிலையில், அந்த நாட்டின் தேசிய ஊடகங்களுள் ஒன்றான Aftenposten, 2026 மேத் திங்கள் 19-ஆம் நாள் மோடியை பாம்பாட்டியைப் போல சித்தரித்தது.
அவர் கையில் பாம்பிற்குப் பதிலாக, எரிபொருள்(பெட்ரோல்) நிலைய குழாய் பாம்பாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
தவிர, அந்தக் கேலிச்சித்திரம் ‘ஒரு புத்திசாலி; ஆனால் தொந்தரவு தரும் மனிதன்’(A clever yet annoying man) என்ற கருத்தையும் உள்ளட்டிக்கி உள்ளது;
ஒரு சிறப்புக் கட்டுரையுடன் இந்தக் கேலிச் சித்திரம் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, இந்தியாவில் கடும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. சமூக ஊடகங்களில் ‘இது இனவெறிப் போக்கு’, ‘மேலைநாட்டு ஆதிக்க மனப்பான்மை’ என்றெல்லாம் விமர்சிக்கப்படுகிறது.
பாம்பாட்டி, யானை, மந்திரவாதி போன்ற பிம்பங்களால் இந்தியாவை முன்னர் சித்தரித்தப் போக்கு இப்பொழுது மீண்டும் மேலை உலகில் புதுப்பிக்கப்படுவதாக கண்டனக்குரல்கள் பிரதிபலிக்கின்றன.
மோடி, நோர்வே பயணத்தின்போது ஆஸ்லோ நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது’ஹெலா லாங்கே’ என்ற பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விகளை மோடி தவிர்த்ததாகவும் அலட்சியம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் எதிர் விளைவாகவும் இந்தியாவில் நிலவும் ஊடக சுதந்திரம் குறித்த நிலையையும் சேர்த்து இந்தக் கேலிச் சித்திரம் வெளியிடப்பட்டுள்ளதாக பன்னாட்டு ஊடகப் பார்வையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
‘பாம்பாட்டி’ என்ற உருவகம் இந்தியாவை பின்தங்கிய, விசித்திரமான நாடாக காட்டும் பழைய மேற்கத்திய பார்வை ஆகும்;
அத்துடன், எரிபொருள் குழாயை பாம்பாகக் காட்டியது, இன்றைய பன்னாட்டு அரசியல்-பொருளாதாரச் சூழலில் இந்தியாவின் எரிசக்தி மற்றும் தூதரகக் கொள்கை குறித்த பகடி அடையாளமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதை, ஊடக சுதந்திரம் என்று சிலர் தற்காத்தாலும், பலர் ‘இது, நகைச்சுவை அல்ல என்றும் இது இனவெறி’ வெளிப்பாடென்றும் குறிப்பிட்டுள்ளனர்


