
மலேசிய குற்றத் தடுப்பு அறக்கட்டளையின் (MCPF) செயற்குழுவினர், இந்திய சமூக பொருளாதார, கல்வி உருமாற்றப் பிரிவான மித்ராவுடன் (MITRA) அண்மையில்(ஜுன் 16) கலந்துரையாடல் நடத்தினர்.
தொடக்கப் பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்களின் குணநல மேம்பாடு தொடர்பான இந்த சந்திப்பு புத்ராஜயாவில் உள்ள கூட்டரச நிருவாக மையத்தின் ‘செத்தியா பெர்காசா’ வளாகத்தில் நடைபெற்றது.
இந்த இருதரப்புக் கலந்துரையாடலின் நோக்கம், தொடக்கப் பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்களுக்கான குற்றத் தடுப்பு மற்றும் குணநல மேம்பாட்டுத் திட்டத்தை வடிவமைத்துச் செயல்படுத்துவதாகும்.
இத்திட்டம் 2026 ஆகஸ்ட் திங்களில் தொடங்கப் படவுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் அமர்வுக்கு மித்ரா-வின் தலைமை இயக்குநர், கே.ரவீந்திரன் நாயர் தலைமை தாங்கினார். இதில், மலேசியக் குற்றத் தடுப்பு அறக்கட்டளையின் சார்பில்
டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன், டத்தோஸ்ரீ கா. புலவேந்திரன், டத்தோ சோ. ஜெயமலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மூவரும் மேற்குறிப்பிட்ட அறவாரியத்-தின் செயற்குழு உறுப்பினர்கள் ஆவர்; குறிப்பாக, தெய்வீகன், தேசிய காவல் படையின் பினாங்கு மாநில தலைமை அதிகாரியாக கடமை ஆற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்கப் பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்களிடையே உள்ள ஒழுங்கு மற்றும் குற்றச் சிக்கல்கள் குறித்தும் அத்துடன் செயல்படுத்தப்பட வேண்டிய பொருத்தமான திட்டங்களுக்கான முன்மொழிவுகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப் பட்டதாக மலேசியக் குற்ற தடுப்பு அறவாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


