
வரும் சனிக்கிழமை ஜூலை 11-ஆம் நாள் நடைபெற இருக்கின்ற ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் நம்பிக்கைக் கூட்டணியை அடியோடு புறக்கணிக்க வேண்டும் என்றும் தங்களின் அரசியல் உரிமையை நிலைநாட்டும் வாக்குரிமையை தேசிய கூட்டணிக்கு அல்லது தேசிய முன்னணிக்கு அளிக்க வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்.ஏ.பி. தலைவர் பொன் வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
நம்பிக்கை கூட்டணி என்று தங்களின் அரசியல் கூட்டணிக்கு பெயர் வைத்துக் கொண்டு இந்திய சமுதாயத்திற்கு அவநம்பிக்கை புரிகின்ற இந்தக் கூட்டணியை இந்திய வாக்காளர்கள் இனியும் ஏற்கக்கூடாது; குறிப்பாக, கூட்டணித் தலைவரும் பிரதமருமான அன்வர் இந்திய சமூகத்தை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார் என்று இன்று கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பொன் வேதமூர்த்தி கூறினார்.

பெரிக்கத்தான் அல்லது தேசியக் கூட்டணியை இந்திய வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் பெரிக்காத்தான் கூட்டணி போட்டியிடாத தொகுதிகளில் தேசிய முன்னணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்றும் அதேவேளை எக்காரணத்தை முன்னிட்டும் பக்காத்தான் கூட்டணியை மட்டும் ஆதரிக்கவே கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
ஆகஸ்ட் முதல் நாள் நடைபெற இருக்கின்ற நெகிரி மாநில சட்டமன்ற தேர்தலில் மலேசிய முன்னேற்ற கட்சிக்கு இரு தொகுதிகளை ஒதுக்குமாறு தேசியக் கூட்டணி தலைமையிடம் பேச்சு நடத்தி வருவதாகவும் நெகிரி மாநில சட்டமன்ற தேர்தலில் பெரிக்கத்தான் கூட்டணியில் விவேக பங்காளியாக செயல்படவும் இருப்பதாக முன்னாள் அமைச்சருமான பொன் வேதமூர்த்தி இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட 13-ஆவது மலேசியப் பெருந்திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கு சிறப்புத் திட்டத்தை அறிவிக்கும்படி பலமுறை வலியுறுத்தியும் பிரதமர் அன்வர் அதை அடியோடு புறக்கணித்தார் என்பதை இந்திய வாக்காளர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இந்தியர்களின் திருமண விழாவில் கலந்து கொள்வது, இறப்பு வீட்டில் துக்கம் விசாரிப்பது, சாக்கடை அடைப்புகளசரி செய்வது, மின்விளக்குக் கம்பத்தை சரி செய்வது என்றெல்லாம் அடையாள அரசியலை மேற்கொண்டு இந்திய சமுதாயத்தை ஏமாற்றிவரும் நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் மலேசிய இந்திய சமுதாயத்தின் அடிப்படை சமூக பொருளாதார கல்வி மறுமலர்ச்சிக்கான ஆக்கபூர்வத் திட்டம் எதையும் மேற்கொள்வதில்லை.
மலேசிய இந்திய சமூகத்தில் ‘கோயில் ஹராம்’ பிரச்சனையை எழுப்பி சமூகத்தில் கொந்தளிப்பான நிலையை உருவாக்கியது பக்கத்தான் கூட்டணி அரசுதான்.

மக்கள் சிந்தனை வேறுபக்கம் சென்று விடாதபடியும் கோயிலை சுற்றி சுழலவைத்து இந்திய சமுதாயத்தை மடைமாற்றியதும் அன்வார் தலைமையிலான அரசுதான்.
எனவே, இந்திய சமுதாயம் இனியும் அன்வாரை நம்பி ஏமாறாமல் ஜோகூர், நெகிரி மாநில சட்டமன்ற தேர்தலில் பெரிக்காத்தான் கூட்டணியையும் தேசிய முன்னணியையும்ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இன்றைய செய்தியாளர் கூட்டத்தில் பொன் வேதமூர்த்தியுடன் எம்ஏபி பேராக் மாநில ஒருங்கிணைப்பாளர் குமார் ராமசாமி, கெடா மாநில ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன் அம்மாசி, ராஜமோகன், நெகிரி செம்பிலான் மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ் பாலன், எம்ஏபி பொருளாளர் மணிமாறன், நிர்வாகக் குழு உறுப்பினர் ஸ்ரீ ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


