
பகாங் மாநிலத்தில் புக்கிட் திங்கி பகுதியில் உள்ள மலைப்பாங்கான காட்டுப் பகுதியில் பிரம்மரிஷி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வனத் துறைக்கு சொந்தமான நிலமோ அல்லது அரசாங்க நிலமோ, புறம்போக்கு நிலமோ கிடையாது.
தனியாருக்கு சொந்தமான நிலத்தில் எழுப்பப்பட்டுள்ளது. நில உரிமையாளரும் பிரிம்மரிஷி மலைக்கோயில் செயல்படுவதற்கு நல்லெண்ண அடிப்படையில் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

இந்த ஆலயம் சீராக இயங்கிவந்த நிலையில், கடந்த 15-ஆம் நாள்(ஆகஸ்ட்), அடையாளம் தெரியாத சிலர், சம்பந்தப்பட்ட ஆலய வளாகத்தில் நுழைந்து அங்குள்ள சாமி சிலைகளை உடைத்து சேதம் ஏற்படுத்தி உள்ளனர்.
இதன்தொடர்பில், கோம்பாக் மாவட்ட தலைமைக் காவல் நிலையம், செந்தூல் மாவட்ட தலைமைக் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆலயத் தரப்பினர் சார்பில் அதிகமான புகார் செய்துள்ளனர்; ஆலயத்தில் அத்துமீறி நுழைந்து காலாடித்தனம் புரிந்த கருங்காலிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலயப் பொறுப்பாளர் மகேந்திரன், தலைமை பூசாரி உள்ளிட்டோர் செய்தியாளர்கள் மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்துவரும் சமூக ஆர்வலரும் மலேசியத் தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவருமான ஸ்ரீ ரமேஷ், நேற்றிரவு செந்தூல் மாவட்ட தலைமைக் காவல் நிலைய வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்..,
நாட்டில் நிலைநாட்டப்படும் நல்லிணக்கச் சூழலுக்கு ஏற்ப பகாங், புக்கிட் திங்கி வட்டார மக்களும் ஒருமைப்பாட்டுடன் வாழ்கின்றனர். இந்த நிலையில், தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்து வழிபாட்டுத் தலத்தில் தீயநோக்குடன் நுழைந்து அங்குள்ள சாமி சிலைகளை உடைத்ததுடன் மேலும் பலசேதங்களை ஏற்படுத்திய தரப்பினரை அடையாளம் கண்டு, அவர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்த ஸ்ரீ ரமேஷ், 15 நாட்கள்வரை எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், தேசிய போலீஸ் படைத் தலைவர்-ஐஜிபி-யிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்படும் என்றும் ஸ்ரீ ரமேஷ் மேலும் தெரிவித்தார்.




