
கோலாலம்பூர் ஜனவரி 27:
நலிந்த இந்திய சமுதாயத்தின் உண்மையான மீட்சிக்காக 13-ஆவது மலேசியத் திட்டத்தில் வெள்ளி 25 பில்லியன் ஒதுக்கப்பட வேண்டும் என்று மாட்சிமைக்குரிய மாமன்னரிடம் மலேசிய முன்னேற்ற கட்சி-எம்ஏபி சார்பில் அதன் தேசியத் தலைவர் பொன் வேதமூர்த்தி நேரில் கோரிக்கை வைத்துள்ளார்.
இதன் தொடர்பில் அரண்மனைக்குச் சென்று மாட்சிமைக்குரிய மாமன்னரின் தனிச் செயலாளரிடம் ஆறு பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை சமர்ப்பித்துள்ளனர்.
ஜனவரி 14ஆம் நாள் பொங்கல் தினத்தன்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி கூட்டம் நடைபெற்றது என்றும் அப்பொழுது எடுக்கப்பட்ட முடிவின்படி இந்தக் கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப்-இன் தலைவருமான பொன் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வரும் பிப்ரவரித் திங்கள் முற்பகுதியில் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்க இருக்கிறது. ஆண்டின் தொடக்கக் கூட்டத்தை நாடாளுமன்ற மரபின்படி, மாட்சிமைக்குரிய மாமன்னர் தொடக்கிவைத்து உரையாற்ற இருக்கிறார்.
அப்பொழுது, 13-ஆவது மலேசியத் திட்டத்தில், இந்திய சமுதாயத்திற்கு ஆண்டிற்கு வெ.5பில்லியன் வீதம், ஐந்து ஆண்டுகளுக்கு 25 பில்லியன் வெள்ளியை ஒதுக்கும்படி பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

13-ஆவது மலேசியத் திட்டத்திற்கான வரைவுத் திட்டத்தில், இது 1% மட்டுமே என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி, கடந்த 68 ஆண்டு சுதந்திர மலேசியாவில் இந்திய சமுதாயம் எந்த அளவிற்கு புறக்கணிக்கப்பட்டுள்ளது; தேசிய பொருளாதார மேம்பாட்டில் இருந்து இந்திய சமுதாயம் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை யெல்லாம் மாட்சிமைக்குரிய மாமன்னரிடம் வழங்கிய கடிதத்தில் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்தக் கடித்தத்தை வழங்கியபோது, மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி பொதுச் செயலாளர் திரு.பால முரளி, உதவித் தலைவர் முனைவர் அ.குமரன், பொருளாளர் திரு.மணிமாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


