
ஜனநாயக செயற்கட்சி துணைத் தலைவரும், இலக்கவியல் அமைச்சருமான கோபிந் சிங் டியோ பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் இரத ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.
அமைச்சருடன் அவரின் துணைவியாரும் மக்களோடு இணைந்து திருமுருகனின் அருள் வேண்டி பிரார்த்தித்தனர்.
அமைச்சருடன் பக்தர்கள் பலரும் இந்தத் தைப்பூச இரத ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
வழிநெடுக பக்தர்கள் அர்ச்சனைகள் செய்தும் தேங்காய்கள் உடைத்தும் முருகனின் திருவருள் வேண்டி வழிபட்டனர்.
பினாங்கில் அமைந்திருக்கும் அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலும்(தண்ணீர்மலை கோவில்) தைப்பூசத் திருவிழாவிற்கு புகழ்பெற்ற தலம் ஆகும். நெடிய வரலாற்றைக் கொண்ட இந்தக் கோவிலில் தைப்பூசத் திருவிழா பல்லாண்டு காலமாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த வருடம் இலக்கவியல் அமைச்சின் ஆதரவில் மக்களின் வசதிக்காக அகண்ட மின்னியல் திரைகள் ஆலய சுற்று வட்டாரத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றன. வந்திருந்த மக்கள் தைப்பூச விழாவினை கண்டுகளிக்க ஏதுவாக இந்த மின்னியல் திரைகள் அமைந்திருக்கின்றன. இலக்கவியல் கண்டுபிடிப்பு நமது சமய கலாச்சார விழாவிற்கு மேலும் மெருகூட்டுகிறது.


