
தலைநகரில் இன்னோர் இலக்கியப்பூ சற்றுமுன் மலர்ந்தது!!
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் நீண்ட காலமாக இலக்கியப் பயணம் மேற்கொண்டு வரும் இலக்கியவாணியும் ஆசிரியையும் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளருமான சாந்தா காளியப்பன் விடியல் என்னும் தலைப்பில் இயற்றிய நூல் இன்று மாலை கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ்
பார்வையற்றோர் சங்க அரங்கத்தில் வெளியீடு கண்டது.

சித்தியவான் வட்டாரத்தில் சுங்கை வாங்கி, கம்போங் டிராலிங் பகுதியில் நடைபெற்ற ஓர் இலக்கிய நிகழ்ச்சியை தொடக்க புள்ளியாகக் கொண்டு தன் இலக்கியப் பயணத்தை தொடங்கிய சாந்தா காளியப்பன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்வழி மேற்கொண்ட இலக்கியப் பயணம் நெடியது.
ஏறக்குறைய 40 ஆண்டுகளாக தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த, சொந்த படிப்பினையையும் இலக்கியத் தேடல் வழிபெற்ற இலக்கியப் பட்டறிவையும் முதலாகக் கொண்டு அவ்வப்பொழுது படைத்த சிறுகதைகளைத் தொகுத்து விடியில் என்ற தலைப்பில் சந்தா காளியப்பன் வெளியிட்டு இருக்கிறார்.

இதன் தொடர்பில் ஐந்தாண்டுகளுக்கு முன், அவர் வித்திட்டு முளைக்க வைத்து காத்து வந்த இந்த இலக்கிய மரம் இன்றுதான் கனிந்திருக்கிறது.
சாந்தா காளியப்பன் ஆசிரியராக பணிபுரிந்ததாலும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் நீண்ட காலமாக பயணித்ததாலும் அதிகமான நண்பர்களும் எழுத்தாளர் வட்டத்தினரும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் சங்கத்தின் மனம் மிகுந்திருந்தது.

மலேசிய இந்தியர் காங்கிரஸ்- ம.இ.கா. தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற தொகுதி மக்கள் பிரதிநிதியுமான டத்தோஸ்ரீ டாக்டர் சொல்வேந்தர் மு. சரவணன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நூல் வெளியீடு செய்தார்.
முன்னதாக சாந்தா காளியப்பனின் ஆசிரியர் என்னும் வகையில் மன்னர் மன்னன் மருதை ஆசியுரையும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மேனாள் தலைவர் ஞானசைமன் வாழ்த்துரையும் வழங்கினர்.
ந. சிவேந்திரன் என்ற இளம் பாடகரும் தமிழ்ச்செல்வன் என்னும் அனுபவ பாடகரும்
இனிய பாடல்களை வழங்கிய இந்த நிகழ்வில் புஷ்பவானி நடனப்பள்ளி கலை மாணவர்கள் நடனம் வழங்கினர்.
பொன் கோகிலம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்


