
ஜொகூர் பாரு, ஏப்ரல் 9-
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கம், எம்ஐஇடி, மஇகா, ஜோகூர் இந்தியர் கால்பந்து சங்கம் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கிண்ண கால்பந்து போட்டி வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஜொகூர் பாசிர் கூடாங்கில் உள்ள பாடாங் பண்டராயா திடலில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
16 வயதுக்கு உட்பட்ட இந்த போட்டியில் ஏ பிரிவில் காப்பார் சிட்டி, குளுவாங் இந்தியர், கரூடா எஃப் சி மற்றும் பினாங்கு பிளேக் ஹண்டர்ஸ் எஃப் சி குழுக்கள் இடம் பெற்றுள்ளன..
பி- பிரிவில் பிளேக் பந்தர் எஃப் சி, இகாகி எஃப் சி, கடாராம் மூடா, சிஐஎம்பி ரெட் ஸ்டார் கிளப்புகள் இடம் பெற்றுள்ளன.

சி பிரிவில் மாசாய் யுனைடெட், யோங் புரோ எஃப் சி, சுங்கை செனாரூட், டூரியான் துங்கால் கிளப்புகள் இடம் பெற்றுள்ளன.
டி பிரிவில் பெர்ஸ்ட் ஸ்டாச், ரெமாஜா ஷா ஆலம், ஈப்போ பிரைடே மற்றும் கே.ஆர் 7 கிளப் இடம் பெற்றுள்ளன.
லீக் பாணியில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் குழுக்கள் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
கால் இறுதியில் வெற்றி பெறும் நான்கு குழுக்கள் அரையிறுதியில் விளையாடும்.
அரையிறுதியில் வெற்றி பெறும் இரண்டு குழுக்கள் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கிண்ணத்தை தட்டிச் செல்ல இறுதி ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தும் என்று தேசிய மஇகா விளையாட்டு பிரிவு தலைவர் ஆண்ட்ரூ டேவிட் தெரிவித்தார்.

போட்டியில் வெற்றி பெறும் குழுவுக்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கிண்ணம், 1,500 வெள்ளி ரொக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.
இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் குழுவுக்கு ஆயிரம் வெள்ளியும் 3,4 ஆவது இடங்களை பிடிக்கும் குழுக்களுக்கு தலா 500 வெள்ளியும் வழங்கப்படும் என்றார்.
மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சிறப்பு வருகை தந்து போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார்.
இம்முறை போட்டியை ஏற்று நடத்தும் ஜொகூர் மாநிலம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
ஜொகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ரவீன் குமார் தலைமையில் நேற்று போட்டிக்கான குலுக்கல் சிறப்பாக நடைபெற்றது.
மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் உதவித் தலைவர் ஸ்ரீ சங்கர் உட்பட ஜொகூர் இந்தியர் கால்பந்து சங்கத்தின் பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.


