
மலேசியாவில் பினாங்கு முதல் ஜொகூர் வரை தமிழ் புத்தகங்கள் – நாவல்களை எழுதியவர்களை கெளரவிக்கும் வகையில் ‘மங்கள தோராணங்கள்’ என்ற தலைப்பில் மாபெரும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி சிரம்பான் நகரில் நடைபெறும் இந்த விழாவில் 50 தமிழ் எழுத்தாளர்களுக்கு சிறப்பு செய்யப்பட உள்ளது என்று நெகிரி செம்பிலான் மாநில தமிழ்ப் பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் மற்றும் விழா ஏற்பாட்டுக் குழு தலைவருமான எம். காளிதாசன் தெரிவித்தார்.
சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் ஆலோசனை மற்றும் முயற்சியில் இந்த விழா மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
65 வயதுக்கு மேற்பட்ட 20 மூத்த எழுத்தாளர்களுக்கு முதல் அங்கமாக பாராட்டும் பணமுடிப்பும் வழங்கப்படும்.
இதில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர்கள் சிரம்பான் நகரில் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டு மறுநாள் விழாவில் சிறப்பு செய்யப்படுவார்கள்.
இரண்டாவது அங்கமாக 64 வயதுக்கு கீழ்ப்பட்ட எழுத்தாளர்களை கெளரவிக்கும் விழா இடம்பெறும் என்றும் அவர் சொன்னார்.
நாட்டில் உள்ள மூத்த மற்றும் இளம் தமிழ் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரனின் நல்ல எண்ணத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
இதனிடையே இளைய தமிழவேள் ஆதி குமணன் காலத்தில் நாட்டில் உள்ள தமிழ் எழுத்தாளர்களை அதிக அளவில் கெளரவித்ததுடன் அவர்களின் நூல்களை வெளியிட்டு பேருதவி புரிந்துள்ளார் என்று சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தெரிவித்தார்.
இது ஒரு பொற்காலம் என்று வர்ணித்த குணசேகரன், தமிழ் எழுத்தாளர்களை பாராட்டி சிறப்பு செய்தால் அது அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகும் என்றார்.
அந்த வகையில் சிரம்பானில் நடைபெறும் இந்த விழா வரலாற்றில் முத்திரை பதித்திருக்கும் விழாவாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
தமிழ் நூல்கள் மற்றும் நாவல்களை எழுதிய மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் ஏற்பாட்டுக் குழு தலைவர் காளிதாசன்(019- 6500064), செயலாளர் இன்பமலர் (012-2940780), துணைச் செயலாளர் கலாதேவி (012-2879110) ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.
அல்லது உங்கள் படைப்புகளை Pusat Khimat Dun Seremban Jaya
No 2844, Jalan SJ 3/6B, Taman Seremban Jaya, 70450 Negeri Sembilan என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.


