ஜ.செ.க.- பிகேஆர் கட்சிகள் கரம்கோத்து மலேசியத் தமிழருக்கு சிறுமை!!

உலக அரசியல் அரங்கில் நல்லவண்ணம் தடம் பதித்துவரும் மலேசியத் திருநாட்டின் இன்றைய பிரதமரும் இலக்கவியல் அமைச்சரும், முறையே தத்தம் பதவியை எட்டுவதற்கு அடிகோலியது, 18 ஆண்டுகளுக்கு முன்னம் ‘ஹிண்ட்ராஃப்’ சார்பில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் பேரெழுச்சிதான்.
இதற்காக பெரும்பாடாற்றியவர்கள், மலேசிய இந்திய சமுதாயத்தினர், குறிப்பாக தமிழர்கள்; ஹிண்ட்ராஃப் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டு அல்லல்பட்டவர்களும் தொண்டை வறண்டு களைப்புற்றவர்களும் இரத்தம் சிந்தியவர்களும் நீதிமன்ற விசாரணைக் கூண்டுகளில் நின்றவர்களும் கலகத்தடுப்பு காவல் படையினர் பீய்ச்சடித்த தண்ணீரால் நனைந்த ஆடையுடன் நூற்றுக் கணக்கான கிலோமீட்டர் தூரத்திற்கு பயணித்து இல்லம் திரும்பியவர்களும் இந்தியர்கள்.
இதில், ஒரேயொரு மலாயரோ அல்லது சீக்கியரோ ஈடுபட்டிருப்பாளர்களா அலலது பாதிப்புற்றிருப்பார்களா என்பது ஐயமே; தள்ளி நின்றுதான் வேடிக்கைதான் பார்த்தனர்;
ஆனால், ஒரு மலாய்த் தலைவரும் ஒரு சீக்கியத் தலைவரும் தலைமையேற்றுள்ள மக்கள் நீதிக் கட்சியும் ஜனநாயக செயல்கட்சியும் கூட்டுசேர்ந்து மலேசியத் தமிழர்களை.., இந்துக்களை.., இந்தியர்களை கட்டம் கட்டமாக நெறுக்கும் நிலை தொடர்கிறது.

அரசியல், கல்வி, பொருளியல், சமூகவியல், ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்து வகையாலும் இத்தகையப் போக்கு தொடர்கிறது. இதன் நீட்சியாகத்தான் தமிழரின் பாரம்பரிய உணவான இட்லியை மறைத்து, தோசையை ஒளித்து, ச்சப்பாத்தியைக் காட்டி, பாணிப் பூரியைக்காட்சிப்படுத்தி, பங்கரா நடனத்தை அரங்கேற்றி தீபாவளிப் பண்டிகையை உருமாற்றும் நடவடிக்கையை இந்த இரு தலைவர்களும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனரோ என்னும் பார்வை வலுவாக எழுகிறது.
ஓர் இனத்தை சிதைக்க வேண்டுமென்றால், அவர்களின் மொழியையும் பண்பாட்டுக் கூறுகளையும் மெல்லமெல்ல சிதைத்தாலேப் போதும் என்னும் குயுக்தி தீபாவளி மேடையில் அரங்கேற்றப்படுகிறதா?
இவ்வாண்டு தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்பு அக்டோபர் 18ஆம் நாள் தலைநகரில் மடாணி ஆட்சியின் தீபாவளி பொது நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வருகையுடனும் தலைமையிலும் நடத்தப்பட்டது.
அந்த நிகழ்ச்சி, எடுத்த எடுப்பிலேயே ஹிந்தி பாடலுடனும் பங்கரா நடனத்துடனும் ஒருசேர தொடங்கப்பட்டது.
கோபிந்த் சிங்கிற்கும் அன்வாருக்கும் உள்ளுணர்வும் மலேசிய தமிழர்களைப் பற்றிய ஈடுபாடும் சிறிதளவேணும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. நடத்தப்பட்ட தீபாவளி நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டளரான கோபிந்த் சிங், அந்த விழாவிற்காக பயன்படுத்திய நிதி அவரின் சொந்தப் பணமோ அல்லது அவர் பொறுப்பு வகிக்கும் அமைச்சக நிதியோ அல்லது அவர் தலைமை ஏற்றுள்ள ஜனநாயக செயல் கட்சி வழங்கிய நிதியோ அல்ல;
பொது மக்களின் வரிப் பணமான அரசாங்க நிதியிலிருந்து பெற்று நடத்தப்பட்ட நிகழ்ச்சி.
பொதுவாக இந்திய சமுதாயம் என்று சொன்னாலும் இதில் ஏறக்குறைய 85 விழுக்காட்டினர் தமிழர்கள்தான்; தவிர, இந்திய சமுதாயத்தில் இந்து சமயத்தினர் என்று கணக்கிட்டாலும் மிகுதியான மக்கள் இந்து சமயத்தாராகவே உள்ளனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆண்டிற்கு ஒரு முறை அதுவும் அரசாங்க நிதியில் கொண்டாடப்படுகின்ற நிகழ்ச்சியை ஒரு பஞ்சாபி நிகழ்ச்சியாக அல்லது வட இந்திய நிகழ்ச்சியாக மாற்றி தமிழர்களை சஞ்சலப்படுத்தவும் சிறுமைப்படுத்தவும் கோபிந்த் சிங்கிற்கு எப்படி மனம் வந்தது?

இந்த நிகழ்ச்சியை உடனிருந்து ரசித்த பிரதமரும் எப்படி ஏற்றுக் கொண்டார் என்பதும் புரியவில்லை.
இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது ஜனநாயக செயல் கட்சி(ஜசெக)யும் மக்கள் நீதிக் கட்சி(பிகே ஆர்)யும் கைகோத்து-கூட்டு சேர்ந்து மலேசியத் தமிழர்களையும் அவர்களின் உயிரணைய தாய் மொழியாம் தமிழையும் சிறுமைப் படுத்துகின்றனவோ என்ற பார்வை எழுகிறது.
இந்து சமய தீபாவளித் திருநாளுக்கும் பங்கரா நடனத்திற்கும் என்ன தொடர்பு? அதைப்போல தீபாவளி பண்டங்களுக்கும் பலகாரங்களுக்கும் நடுவே பாணிப் பூரி என்னும் தண்ணிப்பூரிக்கு என்ன வேலை என்பதைப் பற்றி கோபிந்த் சிங்கும் பிரதமர் அன்வாரும் மலேசிய இந்துக்களுக்கு அளிக்க வேண்டும்.
இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து ஆட்சிக்கு வந்த நாள் முதல் தமிழ் இனம், தமிழ் மொழி ஆகியவற்றுக்கான இருப்பையும் அடையாளத்தையும் மெல்ல மெல்ல சுருக்கப் பார்க்கின்றனர்.
2018-இல் கோபிந்த் சிங் தகவல் துறை அமைச்சராக இருந்தபொழுது மின்னல் பண்பலை வானொலியில் காலை 11:00 மணிக்கு ஒலிபரப்பப்பட்ட 10 நிமிட உலகச் செய்தி அறிக்கை; அதைப்போல இரவு 11:00 மணிக்கு ஒலியேறிய பத்து நிமிட செய்தித் தொகுப்பு ஆகிய இரண்டும் ஐந்தைந்து நிமிடங்களாக குறைக்கப்பட்டன.
மலேசிய இந்தியர்கள், குறிப்பாக தமிழ் வானொலி நேயர்கள் இவ்விரு செய்தி அறிக்கைகளையும் கேட்டு வந்தால், தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான தகவலை அன்றாடம் அறிந்துகொண்டு தங்களையும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.
தேசிய முன்னணி ஆட்சியில் தொடர்ந்த இந்த நல்வாய்ப்பை சிதைத்தது, 2018 இல் ஆட்சிக்கு வந்த இவ்விரு கட்சிகளும்தான்.
இதைப்போலவே தமிழ் பள்ளிகளின் மேம்பாடு மற்றும் மறு கட்டுமானத்திற்காக ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கைவழி தனியே நிதி ஒதுக்கப்பட்டு வந்ததையும் இல்லாமல் செய்து விட்டனர்.
அன்வார் பிரதமர் ஆனவுடன் இந்த நிலைமை இன்னும் மோசம் அடைந்தது.
இதற்கும் முன்னதாக, இளைஞர் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த பொழுது விளையாட்டில் ஆர்வமும் நாட்டமும் கொண்டிருந்த இந்திய சமுதாய இளைஞர்களுக்காக அன்வார் ஏதும் செய்தாரா என்று தெரியவில்லை; அப்படி செய்ததற்கான என்ற எந்தப் பதிவும் இல்லை.
அதைப்போல இவர் விவசாய-கல்வித் துறைகளுக்கும் பொறுப்பேற்று இருக்கிறார்; அந்தக் காலகட்டத்தில்கூட வேளாண்மையில் நாட்டம் கொண்ட தமிழ் இளைஞர்களுக்கு ஏதாவது அணுகூல நடவடிக்கையை அன்வார் எடுத்தாரா என்றால் அதுவும் இல்லை; நிதி அமைச்சராக இருந்தபொழுதும் அப்படி ஏதும் இவர் செய்ததாக பதிவோ தகவலோ இல்லை. காப்புறுதித் தொழில் புரிந்தவர்களுக்கு நெருக்கடியைத்தான் ஏற்படுத்தினார்.

ஒன்றை மட்டும் தட்டாமல் செய்து வருகிரார் பிரதமர் அன்வார். இவர் நிதி அமைச்சராக இருந்து நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கின்ற ஒவ்வொரு பொழுதும் ஏதோவொரு திருக்குறளை மட்டும் ஒப்பிப்பார்.
அதனால் தமிழருக்கோ தமிழுக்கோ திருக்குறளுக்கோ என்ன நன்மை அல்லது வினைப்பயன் நேர்ந்ததென்று தெரியவில்லை;
நிச்சயமாக, அன்வாருக்கு இது அணுகூலமாக இருந்திருக்கும். உலக மறை நூலான திருக்குறளை தானும் அறிந்திருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காகவும் அதன்மூலம் தன்னை பெருமைப்படுத்தி கொள்வதற்காகவும் ஒருவேளை இது அன்வாருக்கு துணை புரியக்கூடும்.
இந்தியா என்னும் நாடு உருவாவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே படை வலிமையுடன் நாடாண்ட தமிழினத்தின் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக இந்திய அமைச்சரவையில் ஒருவரும் பொறுப்பு வகிக்கவில்லை.
புதுடில்லியில் நடைபெறுகின்ற மோடி தலைமையிலான மத்திய அரசு, பிராமணர்களின் அரசு; இந்தியாவை இந்து ராக்ஷ்டிரமாக அதாவது இந்து தேசமாக மாற்றுவதற்காகவே ஆர்எஸ்எஸ் என்னும் கமுக்க அமைப்பை பிராமணர்கள் உருவாக்கினர்.
அந்த அமைப்பில் இளம் வயதிலேயே பயிற்சி பெற்று பிராமண அடிமையாகிவிட்ட நரேந்திர தஸ் தாமோதர மோடி, தன்னுடைய தலைமையிலான அரசை, பார்ப்பனர் நலம் நாடும் அரசாகவே நடத்துகிறார்.
இந்த நாட்டின் வடபுலத்தில் யான் மண்டலத்தை உள்ளடக்கிய கடார மாநிலத்தை வெற்றிகொண்டு அங்கு தமிழர் தலைமையிலான ஆட்சியை நிறுவினான் தமிழ்ப் பெருமன்னன் இராஜேந்திர சோழன்.
சைவமும் பௌத்தமும் கலந்த சமய நெறியோடு கெடாவை ஆண்டு வந்த தமிழ் மன்னர்களில் ஒன்பதாவது மன்னர்தான் அக்காலத்தில் இம்மண்ணில் ஏற்பட்ட இஸ்லாமிய மறுமலர்ச்சியின் காரணமாக இஸ்லாத்தை தழுவினார். அவர்தான் கெடா மாநிலத்தின் முதல் சுல்தானாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார்.
அந்த பரம்பரையின் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும்தான் இன்றளவும் புக்கிட் அனாக் அரண்மனையின் அரசவம்சம் தொடர்கிறது.
இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தமிழனுக்கு இன்றைய மலேசிய மத்திய அமைச்சரவையில் இடம் இல்லை.
ஹிண்ட்ராஃப் எழுச்சிப் பேரணி நடைபெற்றதன் விளைவாகவே அடுத்த 14 வாரங்களில் நடைபெற்ற பன்னிரெண்டாவது பொதுத் தேர்தலில் ஐந்து மாநிலங்களில் பி கே ஆர் கட்சியும் ஜசெகவும் ஆட்சியைக் கைப்பற்றின.

2008 மார்ச் 8-ல் நடைபெற்ற அந்தத் தேர்தலில் பினாங்கு மாநிலத்திலும் தேசிய முன்னணியை வீழ்த்தி நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்றது. அப்போது அந்த மாநிலத்தில் இரு துணை முதலமைச்சர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டு அதில் ஒன்று மலாய்த் தலைவருக்கும் மற்றொன்று தமிழத் தலைவருக்கும் என முடிவு செய்யப்பட்டது..
தமிழருக்காக உருவாக்கப்பட்ட அந்தப் பதவியைப் பறித்து, இப்பொழுது சீக்கியருக்கு கொடுத்து விட்டார். பிரதமர் அன்வார்; பேராசிரியர் ப. ராமசாமியின் மீதிருந்த கோபத்தை தணிப்பதற்காக தமிழர்களை வஞ்சித்து விட்டார்.
அன்வாரின் ஆட்சியில் தமிழ்ப் பள்ளிகளின் கண்காணிப்பாளராக கல்வித் துறையில் நியமிக்கப்பட்ட அதிகாரியும் ஒரு சீக்கியராகவே இருந்தார்; அன்வார் வெற்றி பெற்ற தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியின் இந்திய சமுதாய பிரதிநிதியாகவும் ஒரு தமிழரை அன்வார் நியமித்துக் கொண்டாரா வென்பது தெரியவில்லை.
நான் அறிந்தவரையில் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் திருக்குறளை வாசித்து வருபவர் பிரதமர் அன்வார்; நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்பொழுதெல்லாம் இவ்வாறு செய்யும் அன்வார், திருக்குறள் வளர்ச்சிக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதில்லை. திருக்குறள் வளர்ச்சிக்காக ஒரே ஒரு வெள்ளியைக்கூட அவர் நிதியாக வழங்கியது இல்லை.
ஆனாலும் தமிழர்களை வசப்படுத்தவும் மகிழ்ச்சிப் படுத்தவும் பிரதமர் அன்வார் இப்ராகிம் இவ்வாறு தொடர்ந்து செய்து வருகிறார்.
இப்பொழுது இவர் தலைமையில் மடாணி முழக்கத்துடன் நடைபெறுகின்ற ஒற்றுமை அரசாங்கத்தில், இந்தியர்களுக்கான- தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு, பொதுத்துறை நிறுவனங்களில் எந்த அளவிற்கு வழங்கப்படுகின்றது என்பது குறித்தும் ஒன்றுமே தெரிவதில்லை;
அதைப்போல உயர்கல்வி நிறுவனங்களில் – 20 பொது பல்கலைக்கழகங்களிலும் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற கல்வி வாய்ப்பு, பள்ளிக் கல்விக்கும் உயர்நிலைக் கல்விக்கும் இடைப்பட்ட புகுமுகப் படிப்பான மெட்ரிகுலேஷன் வாய்ப்பிலும் இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்படுகின்ற இடங்கள் குறித்து வெளிப்படையாக அறிவிப்பதோ தெரிவிப்பதோ இல்லவே இல்லை.

நிகழும் 2025 கல்வி ஆண்டில்கூட, எஸ்பிஎம் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஏ பெற்று, மெட்ரிகுலேசன் தேர்விலும் 4.0 புள்ளிகளைப் பெற்ற சிறந்த மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பும் துறையை வழங்காமல், நுழைவுத் தேர்வென்னும் தடையை ஏற்படுத்துகின்றனர்.
நுழைவுத் தேர்வு என்னும் அம்சத்தில் புது டில்லிவாசம் வீசுகிறது.
இவ்வளவையும் சகித்துக் கொண்டு வாழ்க்கையை தொடர்ந்தால் பண்டிகைக் காலத்திலும் இந்துக்களுக்கான- தமிழர்களுக்கான பாரம்பரியத்தை சிதைக்கும் வகையில் பங்கரா நடனத்துடனும் பாணிப்பூரியுடனும் கடந்த மூன்று ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையை, அதுவும் பிரதமர் அன்வார் முன்னிலையிலேயே நடத்திக் காட்டினால் இதன் பொருள் என்ன?
இந்த ஆட்சியேத் தொடர வேண்டும்; அடுத்தத் தேர்தலிலும் வென்று இதே அன்வார் இப்ராகிமும் கோபிந்த் சிங்கும் கூட்டுசேர்ந்து தீபாவளிப் பண்டிகையை பங்கரா நடனத்துடனும் பாணிப் பூரியுடனும் காலம் காலமாக நடத்த வேண்டும் என்று எந்த இந்துவாவது விரும்புவாரா?
இந்த நாட்டின் அரசியல் மறுமலர்ச்சிக்காக, 2007ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற எழுச்சிப் பேரணியில் சீக்கிய சமுதாயத்தின் சார்பில் எத்தனை பேர் கலந்து கொண்டனர் என்பது தெரியவில்லை.
ஒருவேளை, ஓரிருவர் கலந்து கொண்டிருக்கக் கூடும்; அப்படியே இருந்தாலும் அவர்கள் கலப்பு மனம் புரிந்தவர்களாக அல்லது சீக்கியர்களின் அசல் தன்மையை இழந்தவர்களாகவே இருப்பர் என்பது திண்ணம்.
அவ்வாறு கலந்து கொண்ட சீக்கியர்களின் அடையாள அட்டையை வாங்கி பார்த்தால் அவர்களின் இன அடையாளமாக இந்தியர் என்ற இடத்தில் சீக்கியர் என்றுதான் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
மலேசிய அமைச்சரவையில் தமிழர்களை- இந்தியர்களைப் பிரதிநிதிக்கின்ற கோபிந்த் சிங்கின் அடையாள அட்டையில்கூட அவரின் இன அடையாளமாக இந்தியர் என்று இருக்கிறதா அல்லது சீக்கியர் என்றுதான் பதிவுசெய்யப் பட்டுள்ளதாவென்று தெரியவில்லை

தாங்கள் இந்தியர் இல்லை; இந்திய சமுதாயத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் எங்கள் இனம் தனி இனம், அது சீக்கிய இனம்; எங்கள் மொழி தனித்த மொழி, அது சீக்கிய மொழி; எங்கள் சமயம் தனித்த சமயம், அது சீக்கிய சமயம்; அதனால் தங்களை இந்தியர் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் விருப்பம் இல்லை என்று வலியுறுத்துவதுடன், சீக்கியர்கள் தங்களின் அடையாள அட்டையில் இனம் என்ற இடத்தில் ‘இந்தியர்’ என்பதற்குப் பதிலாக ‘சீக்கியர்’ என்று பதிவுசெய்வதிலும் குறியாக இருப்பர்.
தேசிய பதிவுத்துறை(ஜேபிஎன்-Jabatan Pendaftaran Negara) அலுவலகங்களில் சிறப்பாக விண்ணப்பம் செய்து தங்களின் அடையாள அட்டையில், த்ட்டாமல் தங்களை சீக்கிய இனமாக பதிவு செய்து கொள்பவர்கள் இவர்கள்.
அப்படிப்பட்ட சீக்கியர்கள் இந்திய சமுதாயத்திற்காக ஒதுக்கப்படுகின்ற மானியம், கல்வி வாய்ப்பு போன்றவற்றில் இடைபுகுந்து தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டுப் பெறுவதில் தயங்குவதில்லை.
இத்தகைய சூழ்நிலையில் நாட்டில் உள்ள இந்திய சமுதாயத்தில் ஏறக்குறைய 85 விழுக்காட்டினராக தமிழர் இருக்கும்பொழுது அவர்களை அமைச்சரவையில் பிரதிநிதிக்க, சீக்கிய அமைச்சர் என்பது விந்தைதான்.
இதையெல்லாம் பிரதமர் அவதானித்தும் அவதானிக்காததை போல அல்லது தெரிந்தும் தெரியாததைப் போல கடந்து செல்வது இன்னும் வியப்பாக இருக்கிறது.
எந்த இனத்தின்மீதும் குமரிக்கு காழ்ப்பில்லை; இம்மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுமே வாழப்பிறந்தவன்தான். அதேவேளை, ஒரு மனிதன், தனக்கு அதிகாரம் அல்லது வாய்ப்பு இருக்கிறதென்பதற்காக இன்னொரு மனிதனை நெறுக்குவது என்ன நியாயம்?

தமிழினத்தில் இருக்கின்ற சாதிக் கட்டமைப்பைப் பற்றி பிரதமர் அன்வார் நன்கு அறிந்திருக்கிறார்; ஆனால், மலேசிய இந்திய சமுதாயத்தில் தமிழர்கள் தனித்த இனத்தினர் என்பதும் அவர்களின் தனித்த மொழி தமிழ் என்பதும் அதுவும் செம்மொழி என்பதும் தெரியாமல் போனது எப்படி?;
இந்தத் தமிழ் மொழி எத்தனையோ மொழிகளுக்கு அன்னையாக இருந்திருக்கிறது. ஆங்கில மொழிக்கு கூட ஆயிரக்கணக்கான சொற்களை கொடை அளித்திருக்கிறது. நான்கு மொழிகளை உருவாக்கி இருக்கிறது.
இந்த நாட்டிற்குக்கூட பெயரையும் பண்பாட்டு விழுமியங்களையும் தந்தது தமிழ் மொழிதான்; இவை யாவும் இறக்குமதி ஆனது குமரிக் கடல் ஊடாகத்தான்.
இத்தனை சிறப்புகள் இருந்தும் தமிழ் மொழிக்காகவும் திருக்குறள் மேன்மைக்காகவும் பிரதமர் அன்வார் எதுவும் செய்யாமல் தட்டிக்கழித்து வருகிறார். இத்தகைய நடவடிக்கையில் கொம்பு சீவிய காளையைப் போல் கோபிந்த் சிங் விளங்குகிறார்.
இந்த இடத்தில் ஒரு வரலாற்றுச் சம்பவத்தை ஒப்புநோக்கத் தோன்றுகிறது.
இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்த காலத்தில் இலங்கைக்கு அமைதி காப்புப் படையை அந்நாளைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அனுப்பினார்.
அந்த நடவடிக்கையின்போது, இலங்கைக்கு மிக அருகில் இருந்த சென்ன ரெஜிமெண்டிலிருந்து இராணுவப் பட்டாளத்தை அனுப்புவதற்குப் பதிலாக, மூவாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த சீக்கிய ரெஜிமெண்ட் பட்டாளத்தை ராஜீவ் அனுப்பியதில் ஒரு வஞ்சக சூட்சுமம் இருந்தது.
ஒரு சீக்கிய இராணுவ அதிகாரியான ஜெனரல் கல்கத் என்பாரின் தலைமையில்தான் இலங்கைக்கான அந்த அமைதிப் படை அனுப்பப்பட்டது. இந்த சீக்கிய சிப்பாய்களில் ஒருசிலர் கூட்டு சேர்ந்து ஈழத்து இளந்தமிழச்சி ஒருத்தியின் கண்முன்னால் அவளின் தமக்கையும் தாயும் துயிலுரியப்பட்டு அவர்களின் கற்பும் சூரையாடப்பட்டது.
தனலெட்சுமி என்னும் இயற்பெயரைக் கொண்ட இவள்தான், இரண்டு மில்லிமீட்டர் விட்டம் கொண்ட ஈராயிர ‘Steel’இரும்பு இரவைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இடைவார் வெடிகுண்டை தன் இடுப்பில் அணிந்துகொண்டு, 1991 மேத் திங்கள் 21-ஆம் நாள் திருப்பெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த இராஜீவ் காந்திக்கு அணிவிக்க ஒரு மாலையும் நின்றாள்; அப்போது அத்தமிழச்சியின் பெயர் தாணு.
இலங்கையில் நிலவிய தமிழர்-சிங்களர் தொடர்பான இனச்சிக்கலுக்கு, தமிழின விரோதி-வஞ்சகன் ஜே.என்.தீட்சித்தின் தீய ஆலோசனையை மட்டும் கேட்டு ராஜீவ் காந்தி அமைதிப் படையை அனுப்பியது உண்மையில் இராணுவ நடவடிக்கை அல்ல; அதுவோர் அரசியல் குயுத்தி நடவடிக்கை.

1980-ஆம் ஆண்டுகளில் தீவிரமாக காலிஸ்தான் என்னும் தனி நாட்டை உருவாக்குவதற்காக சீக்கியர்கள் கடுமையாக அயுதப் போராட்டம் நடத்தினர்.
ஜர்னைல் சிங் பிந்தரன் வாலே உள்ளிட்ட தலைவர்கள், சீக்கியர்களின் புனித தலமான அமிர்தரசஸ் நகர் பொற்கோவிலில் ஒளிந்துகொண்டு தீவிரவாத நடவடிக்கையை மேற்கொண்டு வந்தனர். அவர்களின் அட்டூழியம் அதிகரித்து வந்த நிலையில், அதற்குத் தீர்வு காண அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அங்கு இராணுவத்தை அனுப்பினார்.
1984 ஜூன் திங்கள் முற்பகுதியில் 10 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கைக்குப் பெயர் ‘Blue Star Operation’. அதில் திருமதி காந்தி வெற்றியும் பெற்றார்.
அந்த ராணுவ நடவடிக்கைக்கு தமிழ் நாட்டைச் சேர்ந்த ஜெனரல் சுந்தர்ஜி என்பவர் தலைமை ஏற்றார்.
தங்களின் புனிதாமான பொற்கோவிலில் தமிழன் தலைமையில் பூட்ஸ் காலுடன் சிப்பாய்கள் நுழைந்ததை சீக்கிய அடிப்படைவாதிகள் ஏற்கவில்லை.
இந்த வஞ்சத்தை, தமிழீழத்தில் சீக்கியர்கள் தீர்த்துக் கொண்டனர்.
இந்திரா காந்திக்குத் தெரியும் இந்தியாவில் மூன்று இன மக்கள் வீரியம் மிக்கவர்கள் என்று; தமிழர்கள், வங்காளியர், சீக்கியர் ஆகியோரே அம்மூவினத்தினர் என்பதை நன்கு அறிந்திருந்த இந்திரா, சீக்கியரை அடக்கத் தமிழர்; தமிழரை மடக்க சீக்கியர் என்பதை தாயும் மகளுமான இந்திராவும் ராஜீவ் காந்தியும் பின்பற்றினர்.
இந்த உத்தியைப் பயன்படுத்தித்தான், சீக்கியனின் விரலைக் கொண்டு தமிழனின் கண்ணைக் குத்தப் பார்க்கிறாரா அன்வார் என்பது தெரியவில்லை.

அன்றைய மலாயாவில், 1956-ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கையை கல்வியாளர்களும் சான்றோர்களும் எடுத்து, ஆய்ந்து பார்த்தால் அதில் நாட்டின் மொத்த வருமானத்தில் ஏறக்குறைய 79 விழுக்காட்டு வருவாய், ரப்பர் தோட்டங்களின் மூலமாக – ரப்பர் உற்பத்தியின் விளைவாகக் கிடைத்தது என்ற உண்மை தெளிவாகத் தெரியும்; இந்தியத் தோட்ட பாட்டாளிகள் குறிப்பாக தமிழர்கள் எந்த அளவுக்கு ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி, இந்த நாட்டின் பொருளாதார கட்டுமானத்திற்கு அடியாகவும் ஆதாரமாகவும் இருந்திருக்கின்றனர் என்ற உண்மையும் வெளிச்சத்திற்கு வரும்.
தாழ்வில்லை! தாழ்வில்லை!! தாழ்வில்லை!!!
தொடரட்டும்.., நன்றாகத் தொடரட்டும்;
பாணிப்பூரி, ச்சப்பாத்தி, பங்கரா நடனத்துடன் தீபாவளி பம்மாத்து இன்னும் இன்னும் தொடரட்டும்!
இப்பொழுது இல்லாவிட்டாலும் எப்பொழுதாவது விழிப்பு பெறுவர் இன்று பத்தாம்பசலித்தனத்துடனும் கண்ணை மூடிக்கொண்டும் அன்வாரையும் கோபிந்த் சிங்கையும் ஆதரிக்கின்ற தமிழர்கள்!
இதில் இன்னும் வேடிக்கையும் வியப்பும் வேதனையும் நிறைந்தது, இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் தெரிவித்த கருத்துதான்.
மலாய் சமூகத்தின் மறுமலர்ச்சிக்காக அரசாங்கம் எத்தனையோ தனித் திட்டங்களை வகுத்து வருகின்றது;
அதைப்போல மலேசிய இந்தியர்களுக்கும் சில சிறப்பு சலுகைகளை வழங்கினால் அதைக் கண்டு மலாய்ச் சமூகம் பொறாமைப்படக்கூடாது என்று தெரிவித்திருப்பதுதான், அந்தக் கருத்து.
இத்தகைய கருத்து இனங்களுக்கு இடையே பிணக்கையும் பொல்லாங்குத்தனத்தையும் மெல்ல ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
நாட்டை ஆளுகின்ற ஒரு தேசியத் தலைவருக்கு இது அழகல்ல;
எல்லாம் சரி, பிரதமர் அன்வார்,
தமிழர்களுக்காக அல்லது இந்திய சமுதாயத்திற்காக என்ன சலுகையை அல்லது சிறப்பான திட்டத்தை எப்போது அறிவித்திருக்கிறார் என்பது தெரியவில்லை.
மேனாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் காலத்தில் உருவாக்கப்பட்ட மித்ரா கட்டமைப்பை சிதைக்கும் விதமாக மித்ராவை ஒரு நிலையான- சீரான நிர்வாகத்தின்கீழ் கொண்டுவராமல் அதை இங்கும் அங்குமாக பந்தாடி வருகிறார் அன்வர்.
ஒருவேளை இது உருவாவதற்கு மேனாள் அமைச்சர் பொன். வேதமூர்த்தி காரணமாக இருந்தார் என்பது காரணமாக இருக்குமோ என்பதும் தெரியவில்லை.
2013 மே 5 பொதுத் தேர்தலுக்குப்பின் உருவான 13 வது நாடாளுமன்ற அமைச்சரவையில் எவரும் எதிர்பாரா வண்ணம் பொன். வேதமூர்த்திக்கு துணை அமைச்சர் பொறுப்பு வழங்கினார் நஜீப்; அதற்கு இசைவாக அவர் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
அத்துடன் இந்திய சமுதாயத்திற்கான மறுமலர்ச்சித் திட்டங்களை பொன். வேதமூர்த்தி வழியே அமுல்படுத்த எண்ணம் கொண்ட நஜீப் அதற்கான அறிவிப்பையும் செய்தார்.
அதே அமைச்சரவையில் கூட்டரசு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சராக இருந்த அன்றைய டத்தோ சரவணன், இதற்கு கடும் எதிர்ப்பு. தெரிவித்தார்.
இந்திய சமுதாயத்திற்கான நலத்திட்டங்கள் யாவும் தேசியக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மஇகா மூலம்தான் நிறைவேற்றப்பட வேண்டுமே அல்லாமல் ஹிண்ட்ராஃப் தலைவரான பொன் வேதமூர்த்தி மூலம் நிறைவேற்றப்பட்டால் பிறகு நாங்கள் எதற்கு தேசிய முன்னணி உறுப்பு கட்சியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கேள்வி கேட்டு நஜீப்புக்கு நெருக்கடி கொடுத்ததால், அவர் அப்படியே பின்வாங்கி விட்டார்.
பொன். வேதமூர்த்தி மூலமாக இந்திய சமுதாயத்தை குளிர்விக்க அவர் எண்ணிருந்தத் திட்டங்களை எல்லாம் அப்படியே கிடப்பில் போட்டு விட்டதால் தொடக்கத்தில் நஜீப் அறிவித்தபடி பொன் வேதமூர்த்திக்கு ஆள் பலமோ நிதி வளமோ வழங்கப்படவில்லை.
இதனால் சலிப்புற்று பொன் வேதமூர்த்தி, மக்களுக்கு எவ்வித பணியையும் அரசாங்கத்தின் வழி நிறைவேற்ற முடியாத நிலையில் வெறுமனே செனட்டர் பதவியும் துணை அமைச்சர் பதவியும் எதற்கு என்று பதவி விலகினார்.
அந்த சமயத்தில் தேசிய முன்னணி ஆட்சிக்கும் கூட்டணிக்கும் எதிராக மீண்டும் மலேசிய இந்திய சமுதாயத்தில் அதிர்ச்சி அலைகள் எழுந்தன.
அந்தக் கட்டத்தில், இந்திய சமுதாயத்தில் எழுந்த பொறுமலைத் தணிப்பதற்காக, அமைச்சரவையின் கண்காணிப்பில் பிரதமர் துறையின் ஒருங்கிணைப்பில் நஜீப் உருவாக்கியதுதான் செடிக்;
அந்த செடிக் அமைப்பைத்தான் அடுத்து வந்த 14ஆவது அமைச்சரவையில் ஒற்றுமைத்துறை அமைச்சராக இருந்த பொன் வேதமூர்த்தி, மித்ராவாக உருமாற்றம் செய்தார்.
மித்ராவுக்கு இத்தகைய வரலாறு இருப்பதால்தானோ என்னவோ அன்வார் அதை சீரான-முறையான நிர்வாகத்தின்கீழ் கொண்டு வராமல் அங்கேயும் இங்கேயும் இழுத்தடித்து மாற்றாந்தாயைப் போல நடந்து கொள்கிறாரோ என்று எண்ணவும் இடம் இருக்கிறது.
இப்படி ஒவ்வொன்றாக கட்டம் கட்டமாக இருப்பதையெல்லாம் சிதைப்பதுதான் மடாணி அரசாங்கத்தின் எழுதப்படாத திட்டமா என்று கேட்கவும் தோன்றுகிறது.
எல்லாவற்றுக்கும் காலம் எனும் நல்லாசிரியர் பதில் எழுதுவார் என்று குமரி நல்லாள் எதிர்பார்க்கிறாள்!
1984 ஜூன் மாதத்தில் சீக்கிய கிளர்ச்சிப் படைகளை நசுக்குவதற்காக இந்திரா காந்தி மேற்கொண்ட நடவடிக்கைக்கு வஞ்சம் தீர்க்கும் வகையில் அதே ஆண்டு இதேநாளில்(அக்டோபர்-31) தன் சொந்த மெய்க்காப்பாளர்களால் வெகு அருகில் இருந்து சுடப்பட்டார் அந்த வீரத் தலைவி.
33 குண்டுகள் அவரின் உடலை துளைத்திருந்தன. அடுப்பங்கரையில் இருந்து இரவு உடையுடன் ஓடிவந்த சோனியா காந்தியின் மடியில் அந்த வீரத்தலைவியின் உடல் சாய்க்கப்பட்ட பொழுதே அவரின் உயிர் பிரிந்திருந்தது.
ஆனாலும், அடுத்த இரண்டு மணி நேரப் போராட்டம் மருத்துவ மனையில் தொடர்ந்தது. இருந்தபோதும் மருத்துவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போனது.
காங்கிரஸ் கட்சியின் இன்றைய தலைவரும் இந்திராவின் மருமகளுமான சோனியாவின் நம்பிக்கையும்கூட சரிந்தது.
இந்தக் கலவரச் சுழலில் இந்திராவைச் சுட்ட பீந்த் சிங்கின் உடல் நீண்ட நேரம் அங்கு கிடந்தது. இந்திராவை மெய்க்காப்பாளர் சுடுவதை அறிந்த அதிரடிப் படையினர் மேற்கொண்ட அடுத்த நிமிட வேட்டையின்போது கீழே விழுந்த பீந்த் சிங், புன்னகையுடன் காணப்பட்டான்.
இதில், இந்திரா காந்தியின் ராஜ தந்திரம் தோற்கவில்லை; அவர் தன்மீது வைத்த முழு நம்பிக்கையைய்7உம் சேர்த்துக் கொன்றான் பியாந்த் சிங்.
இந்த வேளையில், இந்திரா காந்தியை நினைவுகூர்கிறாள் குமரி.
அவரின் புகழ் உலக அரசியல் வெளியில் நிலைக்கட்டும்.
அந்தக் காலக்கட்டத்தில் மலேசியாவில் நடைபெற்ற ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், கர்ப்பால் சிங்கிற்கு எதிராக தேசிய முன்னணி மேடையில் பிரச்சாரம் செய்த அன்வார் இப்ராகிம், இந்திரா காந்தி படுகொலையை வகையாகப் பயன்படுத்தினார் என்பதும் இங்கேக் குறிப்பிடத்தக்கது.








