
ஷா ஆலம், நவ 19-
சிலாங்கூர் மாநிலத்தில் முஸ்லீம் அல்லாதவர்களின் பிரேத மேலாண்மை தொடர்பான தொகுப்பை (package) சிலாங்கூர் அரசு மறுபரிசீலனை செய்து, விதிக்கப்படும் கட்டணங்கள் நியாயமானவையாகவும் குடும்பத்தினர் செலுத்தக்கூடியதாகவும் இருப்பதை உறுதிப்படுத்தும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறியிருப்பது மிகவும் வரவேற்ககூடியது என்று சிலாங்கூர் மாநில பிபிபி தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
இந்த விசயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புடன் விரிவாகப் பேசப்படும் என பௌத்தம், கிறிஸ்துவம், இந்து, சீக்கிய மதங்களுக்கான நிர்வாகக்குழு (லிமாஸ்) தலைவருமான இங் ஸீ ஹான் கூறியுள்ளார்
கிரிமேட்டோரியம் (மயானம்/உடல் தகன நிலையம்) வசதிகள், அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக குறைந்த வருமானம் (B40) கொண்ட பிரிவினர் நியாயமான கட்டணத்தில் தகன சேவைகளை பயன்படுத்த ஏற்படுத்தப்பட்டவை ஆகும்.
புதிய கிரிமேட்டோரியம் கட்ட தேவையான இடங்களை அனைத்துப் ஊராட்சி மன்றங்களும் அடையாளம் காண மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது சிலாங்கூரில் எட்டு இடங்களில் பொது கிரிமேட்டோரியம் உள்ளன.
அவை ஷா ஆலம், கிள்ளான், பெட்டாலிங் ஜெயா, சிப்பாங், மற்றும் சுபாங் ஜெயாவில் (இரண்டு) உள்ள நிலையில் கோலா லங்காட் மற்றும் உலு சிலாங்கூரில் கட்டுமானத்தில் உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலலங்காட் மற்றும் உலு சிலாங்கூரில் புதிதாக கட்டப்படும் மின் சுடலைகள் அந்த வட்டாரத்தில் உள்ள இந்தியர்களுக்கு பெரும் நன்மையை அளிக்கும்.
அதேபோல் உலுலங்காட் வட்டாரத்தில் புதிய மின் சுடலை கண்டிப்பாக கட்டப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தகவல்:
செ. வே. முத்தமிழ் மன்னன்
தலைவர், மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம்


