
ஷா ஆலம் நவ 25-
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழையால் பல மாநில மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிலாங்கூரில் பெய்து வரும் தொடர் மழையால் சில மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சூழ்நிலையைச் சிலாங்கூர் மாநில அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் பொருட்டுச் சம்பந்தப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர்கள் களமிறங்க வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி உத்தரவிட்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உடனடியாக உதவிகள் கிடைக்கச் செய்யத் தற்போதைய நிலவரத்தைத் சிலாங்கூர் அரசாங்கம் உன்னிப்பாக கவனித்து வருவதாக டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி கூறியுள்ளார்.
அனைத்து அதிகாரிகளையும், சம்பந்தப்பட்ட தரப்பினரையும், ஆட்சிக்குழு உறுப்பினர்களையும் களமிறங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் கிள்ளான், ஷா ஆலம், மேரு, சபா பெர்ணாம், ஸ்ரீ மூடா உட்பட பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக வெள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட வேண்டும்.அவர்களுக்கு தேவையான உதவிகளை சிலாங்கூர் அரசு செய்து தர வேண்டும் என்று டாக்டர் சுரேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி நேரடியாக களத்தில் இறங்கி உதவி புரிந்துள்ளார்.
ஆகவே சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியும் தயார் நிலையில் இருப்பதாக டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
தகவல்: செ. வே. முத்தமிழ் மன்னன், தலைவர்-மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம்


