
16 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் அடுத்த ஆண்டு முதல் சமூக ஊடக தளத்தை அணுகுவதைத் தடை செய்வதாக அரசாங்கம் அறிவித்த முடிவை மக்கள் முற்போக்கு கட்சி (பிபிபி) வரவேற்கிறது.
இந்த துணிச்சலான முயற்சியை ஆன்லைன் பாதுகாப்பு சட்டம் 2025 (சட்டம் 866)இன்படி அறிமுகப்படுத்தப்பட்ட “தேவையான மற்றும் காலத்திற்குத் தக்க நடவடிக்கை” என பிபிபி தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகன் வர்ணித்தார்.

“இன்றைய டிஜிட்டல் காலத்தில் சமூக ஊடகம் இளைஞர்களின் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாக மாறியுள்ள நிலையில், இந்த ஒழுங்குவிதி குழந்தைகளை இணையத்தளத்திலிருந்து வரும் மிரட்டல், ஒழுக்குக்கேடான உள்ளடக்கம், மோசடி, மற்றும் இணையமோசடி ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும்என்று லோக பாலா மோகன் தெரிவித்தார்.
இந்நடவடிக்கை இளம் மலேசியர்களின் நலம், கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்து பிபிபி கட்சி நீண்டகாலமாக அக்கறைப்பட்டு வந்தது; குரல் கொடுத்திருக்கிறது.

இணையத்தின் இருண்ட பக்கத்திலிருந்து இளைஞர்களை பாதுகாக்க தேசிய அளவிலான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமையும் என்றும், பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் இணைய சேவை நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் அனைவரும் இணைந்து பாதுகாப்பான இணைய சூழலை உருவாக்குவது அவசியம்.
புதிய ஒழுங்குவிதி, இன்னும் முதிர்ச்சி பெறாத அல்லது டிஜிட்டல் விழிப்புணர்வு இல்லாத சிறார்களைப் பாதுகாப்பதை இம்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

குழந்தைகளின் டிஜிட்டல் நலனை பாதுகாப்பது ஒழுங்குபடுத்துநர்கள், சேவை வழங்குநர்கள், பெற்றோர் மற்றும் சமூகங்கள் ஆகிய தரப்பினரின் கூட்டுப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் பிபிபி நம்புகிறது.
குறிப்பாக பெற்றோர் கண்காணிப்பு குறைவாக இருக்கும் குடும்பங்களுக்கு, இந்த ஒழுங்குவிதி ஒரு வலுவான அடிப்படை பாதுகாப்பை வழங்குகிறது.

அதே சமயம், சமூக ஊடக தளங்கள், இணைய சேவை வழங்குநர்கள் மற்றும் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அமைப்புகள் இந்த புதிய விதிகளை மனப்பூர்வமாகவும் வெளிப்படையாகவும் அமல்படுத்த வேண்டும் என டாக்டர் லோக பாலா மோகன் அழைப்பு விடுத்தார்.
பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்தவும், ஆரோக்கியமான இணைய பழக்கங்களை ஊக்குவிக்கவும் உதவ வேண்டும்.
தேசிய அளவில் குழந்தைப் பாதுகாப்பு கொள்கைகளை வலுப்படுத்தவும் சமூக, கல்வி மற்றும் ஆதரவுத் திட்டங்களை மேம்படுத்தவும் பிபிபி தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் உறுதியளித்தார். “இது வெறும் தடையைப் பற்றியது அல்ல; அடுத்தத் தலைமுறைக்காக பாதுகாப்பான, பொறுப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்குவதற்கான ஒரு முயற்சி என்றும் அவர் சொன்னார்.



