
மக்கள் முற்போக்கு கட்சி(பிபிபி) தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகன், முன்னாள் தலைவர் எஸ்.ஐ.ராஜா மறைவையொட்டி, அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
எஸ்.ஐ.ராஜா, நிமோனியா காய்ச்சல் காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 86.
மறைந்த எஸ்.ஐ.ராஜா, கட்சியின் வரலாற்றில் சவாலான காலகட்டத்தில் பிபிபி-யின் வளர்ச்சி, நிலைத்தன்மைக்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியவர்; கட்சியினரிடையே, மதிப்பிற்குரிய தலைவராக விள்ங்கிய எஸ்.ஐ. ராஜாவின் மறைவு, அவரின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, பிபிபிக்கும் ஒரு பெரும் இழப்பாகும். அவர், கட்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்; ‘பல இன ஒற்றுமை; மக்களுக்கான சேவை’ என்னும் கட்சியின் கொள்கையை உறுதியாகக் காத்தவர் அவர் என்று லோக பால மோகன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஐ. ராஜாவின் தலைமைத்துவமும் வழிகாட்டுதலும் பிபிபி கட்சியில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியதுடன் கட்சி எதிர்கொண்ட சவால்களையும் கடந்து செல்ல உதவின; அவரின் பாரம்பரியம் இன்றும் கட்சி உறுப்பினர்களாலும் தலைவர்களாலும் நினைவுகூரப்படுவதாக டத்தோ டாக்டர் லோக பால மோகன் மேலும் குறிப்பிட்டார்.
பிபிபி தேசிய தலைமைத்துவம் மற்றும் நாடு முழுவதும் உள்ள கட்சி உறுப்பினர்கள் சார்பில், துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கடினமான நேரத்தில் குடும்பத்தினர் ஆறுதலும் தேறுதலும் பெற வேண்டும் எனவும் எஸ்.ஐ. ராஜாவின் ஆன்மா சாந்தியடையட்டும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சிறந்த வழக்கறிஞராக விளங்கிய எஸ். ஐ. ராஜா, 1978 முதல் 1982 வரை பிபிபி தலைவராக பணியாற்றினா. மூப்பின் காரணமாக பொதுவாழ்வில் இருந்து அவர் விலகிய பின்னரும் அவர் கட்சியில் ஒரு செல்வாக்கு மிக்கவராக விளங்கினார் என்று டத்தோ டாகடர் லோக பால மோகன் மேலும் தெரிவித்துள்ளார்.


