Monday, May 4, 2026

ஸம்ரி வினோத், கமுக்க அரசியல் நகர்வு!

மத வெறுப்பையும் பிற சமய தூற்றுதலையும் இருவிழியெனக் கொண்டு செயல்பட்டுவரும் வெறுப்பு பிரச்சாரகர் ஸம்ரி வினோத்தின் அண்மைக்கால நடவடிக்கையில் அரசியல் நகர்வு பொதிந்துள்ளதை புரிந்தோர், அறிவர்

கடந்த ஆண்டு மேத் திங்கள் 27ஆம் நாள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், கோலாலம்பூரில் பரபரப்பிற்கு இலக்கான ஓரிடத்தில் பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டிய அதேநாளில் நாட்டின் கவனத்தை மொத்தமாக ஈர்க்கும் வகையில் தலைநகரில் இருந்து பல நூறு மைல்களுக்கு அப்பால் பெர்லிஸ் மாநிலத்தில் கைதானார், ஸம்ரி வினோத்.

இப்பொழுது இந்தியாவின் பிரதமர் நரேந்திர தாஸ் தாமோதர மோடி இன்று அரசுமுறைப் பயணமாக கோலாலம்பூருக்கு வருகின்ற நாளில் இந்த நாட்டில் இருக்கின்ற இந்து வழிபாட்டு தலங்களை சட்டவிரோத ஆலயங்கள் என்று முத்திரைகுத்தி, அவற்றின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும் கவனயீர்ப்பை முன்னிறுத்தி கோலாலம்பூரின் மையப் பகுதியில் முக்கியமான வர்த்தக வளாகங்கள் வரிசையாக அமைந்துள்ள இடத்தில் பேரணிக்கு ஏற்பாடு செய்து நாட்டின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கப் பார்க்கிறார் என அவதானிக்க முடிகிறது.

இந்த இரண்டு சம்பவங்களிலும் ஏதோ ஒரு வகையில் ஸம்ரி வினோத் அரசியல் நகர்வை யாருக்காகவோ அல்லது தனக்காகவோ முன்னெடுப்பதாகத் தெரிகிறது.

நாட்டை ஆளுகின்ற பிரதமருக்கு எத்தனையோ அருங்கடமைகள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்ற வேளையில் தன்னுடைய தலைமையில் அல்லது தான் தலைமையேற்று மதமாற்ற சடங்கையும் வழிபாட்டு தளத்திற்கு அடிக்கல் நாட்ட வேண்டிய வேளையையும் இவர் எதற்காக செய்கிறார் என்று தெரியவில்லை.

மதமாற்ற சடங்குக்கும் அடிக்கல் நாட்டுவதற்கும் இஸ்லாத்தின் சமய எல்லையிலும் அரச எல்லையிலும் ஏராளமான சமய சான்றோர்களும் மார்க்க அறிஞர்களும் இருக்கின்றனர்.

குறிப்பாக பிரதமர் துறையிலேயே இஸ்லாம் சமய மேம்பாட்டுக்காக தனியாக ஓர் அமைச்சர் கேபினட் அந்தஸ்தில் இருக்கும்பொழுது இவர் ஏன் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா பகுதியில் பிரச்சனைக்குரிய அருள்மிகு பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பள்ளிவாசலுக்கு அடிக்க நாட்ட வேண்டும் என்பது நாட்டோரின் கவனத்திற்கு உரியதாக இருக்கட்டும்.

இந்து சமயத்திற்கு எதிராக ஜம்ரி வினோத் தரக்குறைவாகவும் தாழ்த்தியும் சிறுமைப்படுத்தியும் பேசி வருவதாக ஏறக்குறைய 1,000 போலீஸ் புகார் செய்திருந்த வேளையில் நடவடிக்கை எடுக்காத காவல்துறை அன்றைய நாளாகப் பார்த்து குறிப்பாக பிரதமர் பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டுக் கின்ற தருணமாகப் பார்த்து அதுவும் பெர்லிசில் கைது செய்தது.

அடுத்த நாள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இரண்டு நாள் போலீஸ் தடுப்பு காவல் உத்தரவு வாங்கியும் பொதுமக்களில் திரண்டு வந்து அவரை விடுவிக்க வேண்டும் என்று கேட்டதற்காக போலீஸ் தரப்பில் ஸம்ரி வினோத்தை அலுங்காமல் குலுங்காமல் காவல் துறையினர் விட்டுவிட்டதாக ஊடகத் தகவல் தெரிவித்தது.

ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி போலீஸ் தடுப்பு காவலில் வைப்பதற்கான உத்தரவையும் பெற்றபின் பொதுமக்கள்கூடி சம்பந்தப்பட்டவரை விடுதலை செய்ய வேண்டும் என்றால் போலீஸ் கண்ணை மூடிக்கொண்டு சம்பந்தப்பட்ட நபரை விட்டு விடும் என்றால், அது சமய வெறுப்பு ப் பிரச்சாரகர் ஸம்ரி வினோத்திற்கான சிறப்பு சலுகையாக மட்டும் இருக்கும்.

அப்பொழுது, பிரதமர் பள்ளிவாசலுக்கு அடுக்கில் நாட்டிய நிகழ்வு, காதும் காதும் வைத்தாற்போல கடந்து செல்ல, ஸம்ரி வினோத் கைதான செய்தி மட்டும் ஊடக வெளிச்சத்தில் உலா வந்தது.

Made with LogoLicious Add Your Logo App

இப்பொழுது மலேசியாவின் பாரம்பரிய நட்பு நாடான இந்தியாவின் பிரதமர் மலேசிய பிரதமர் அன்வாரின் அழைப்பின் பெயரில் வருகை தர இருக்கின்ற நேரம் பார்த்து, மலேசியவாழ் இந்து மக்களிடம் சஞ்சலத்தையும் ஊடகத்திலும் பொது வெளியிலும் சலசலப்பையும் ஏற்படுத்தும் வகையில் இந்த ஆலய சிக்கலைப் பற்றி எழுப்ப வேண்டிய காரணம் என்ன?

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே அன்றைய மலாயாவில் தோட்டப்புறங்களில் வாழ்ந்த மக்கள் ஓரளவுக்கு சீராக வாழவேண்டும் என்ற அளவில் வழிபாட்டு தலங்களையும் தமிழ் பள்ளிக்கூடங்களையும் கள்ளுக்கடையையும் நிறுவிக்கொள்ள அன்றைய வெள்ளைய நிர்வாகம் அனுமதி அளித்தது.

அந்தந்த இடங்களுக்கு உரிய நிலத்தை அன்றைய வெள்ளைய அரசு சம்பந்தப்பட்ட அமைப்புகளின் நிறுவனங்களின் பெயரில் இடத்தை உறுதி செய்திருக்க வேண்டும் அல்லது பட்டா செய்து வழங்கி இருக்க வேண்டும்.

ஏனோ அவ்வாறு நடைபெறவில்லை; சுதந்திர மலேசியாவிலாவது அதற்கான முன்னெடுப்பு எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

குறிப்பாக உணர்ச்சிக்கு இடம் கொடுக்கின்ற வழிபாட்டு தளங்களுக்கான இடத்திற்காவது இட உரிமை வழங்கி இருக்க வேண்டும்

காலப்போக்கில் தோட்டப்புற நிலங்களை கையகப்படுத்தி மேம்பாட்டுப் பணிகளுக்காக தனியாரிடம் ஒப்படைத்த மத்திய கூட்டரசாங்கம் வழிபாட்டு தலங்கள்மீது தனி கவனம் செலுத்தி அந்தந்த வழிபாட்டு தலங்களுக்குரிய இடத்தை அந்தந்த ஆலயத்தின் பெயரால் பட்டா செய்து கொடுத்திருக்க வேண்டும்.

சாலை கட்டுமானம் தண்டவாள நிர்மாணிப்பு கட்டடங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த கட்டுமானத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்திய – தமிழக தோட்ட பாட்டாளிகள் எந்த அளவுக்கு இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி தம்முடைய வாழ்வை ஈகம் செய்தனர் என்பது இன்றைய தலைமுறையினருக்கு குறிப்பாக மாணவ சமுதாயத்திற்கு அடியோடு தெரியாமல் போய்விட்டது; குறிப்பாக அரசத் தரப்பிலேயே இந்த விபரம் எல்லாம் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.

குறைந்தபட்சம் 1956 ஆம் ஆண்டு அதாவது நாட்டின் விடுதலைக்கு- மெர்டேக்காவிற்கு முந்தைய ஆண்டின் பொருளாதார கணக்கறிக்கையை எடுத்து பார்த்தால் அதில் 79 விழுக்காட்டு வருமானம் ரப்பர் தோட்டத்துறை மூலம் கிடைத்தது என்பது தெளிவாகும்.

இதற்கு அடிப்படைக் காரணம் தமிழ் தோட்ட பாட்டாளிகளின் கடுமையான உழைப்பும் தளராத ஊக்கமும்தான் காரணம்.

அப்படி இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு காலத்தில் தூணாக இருந்த சமுதாயம் அன்று வழிபட்ட தலங்களை இன்று சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள் என்று போகிற போக்கில் முத்திரை குத்துவது என்ன நியாயம் என்று தெரியவில்லை.

இந்த மண்ணிற்கு சமய வாசத்தை கொடுத்தவர்கள் தமிழர்கள்; அரச மங்கல நிறமான மஞ்சள் வண்ணத்தையும் வெற்றிலைப் பாக்கு தாம்பூல பரிமாற்றத்தையும் தந்தவர்கள் தமிழர்கள்.

இந்த நாட்டுக்கு மலைநாடு என்னும் காரண ப் பெயரைக் கூட வழங்கியது தமிழர்தம் உயிரணைய தாய் மொழியாம் தமிழ் மொழியாகும். மொத்தத்தில் பண்பாடு நாகரிகம் சமயத் தாக்கம் எல்லாவற்றையும் குமரிக்கடல் வழியே கடத்திய தமிழர்களின் அன்றைய வழிபாட்டுத்தலங்கள் இன்று சட்டவிரோத வழிபாட்டு தலங்கள் என்று யாரோ ஒரு மூன்றாவது நபர் சொல்கிறார் என்றால் அதையும் கடந்த 10 நாட்களாக இதை சொல்லி சொல்லி பிரச்சாரம் செய்து வருகிறார் என்றால்;

அதை அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்பது வினோதமாகத்-தான் தெரிகிறது.

காலம் கடந்து, நேற்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசித்தியோன் அறிக்கை வெளியிட்டு இந்த பேரணி நடக்கக்கூடாது என்று ஒப்புக்கு சொல்கிறார்; காவல்துறை-யும் இத்தகைய நடவடிக்கை சமூக நல்லிணக்கத்திற்கும் சம்பந்தப்பட்ட இடத்தில் இருக்கின்ற SOGO, Pertama உள்ளிட்ட வர்த்தக வளாகங்களின் வணிக நடவடிக்கை பாதிக்கப்படும் என்றும் தடை விதிக்கிறது.


இத்தனையையும் கடந்து திட்டமிட்டபடி அந்த பேரணி நடந்தே தீரும் என்று ஜம்ரி வினோத் என்ற தனிமனிதர் சொல்கிறார் என்றால் இதற்கு அடிப்படை என்ன என்பதை நாட்டோரே நல்லோரே சிந்திப்பீர் ஒரு கணம்!

காலம் எல்லாவற்றையும் கருத்தில் கொள்ளும்! தீர்ப்பும் எழுதும்!!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை