
பேராக் மாநிலம் பீடோர் சாலை 12-ஆவது மைலில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் புதிய நிர்வாகத்தை ஏற்படுத்தி ஆலயம் சீராக செயல்படுவதன் தொடர்பில் டாக்டர் ரமேஷ் முனைப்பு காட்டி வருகிறார்.
அந்த வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க அம்மன் வழிபாட்டுத்தலமாக நீண்ட காலமாக இயங்கி வருகின்ற நிலையில், அந்த ஆலயத்தின் பதிவு தற்காலிகமாக சங்க பதிவகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆலயத்தின் பழைய நிர்வாகத்திலும் நிதி பராமரிப்பிலும் நிகழ்ந்த எண்ணற்ற கோளாறாலும் குளறுபடியாலும் அரசு சார்பில் இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய சமுதாயத்தை அண்மைக்காலமாக சூழ்ந்து இருக்கின்ற சிக்கலான பிரச்சனைகளில் ஆலய சிக்கல்தான் முன்னிலை வகிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ஆலயத்தின் பதிவும் ரத்தாகி இத்தனை காலமும் அந்த ஆலயத்தை நிர்வகித்து வந்த நிர்வாகமும் கலைக்கப்பட்டுள்ளது.
மலேசிய இந்திய சமுதாய அரசியலின் மைய புள்ளியாக இருக்கின்ற மலேசிய இந்திய காங்கிரஸ்-மஇகா, ஆலய சிக்கலை தேசிய அளவில் தீர்த்து வைக்க முனைப்பு காட்டி வருகின்ற சூழலுக்கு ஏற்ப தெலுக் இந்தான் கிளைத் தலைவர் டாக்டர் ரமேஷ் இந்த ஆலயம் தொடர்பாக புதிய நிர்வாகத்தை ஏற்படுத்தவும் சுற்றுவட்டார மக்களின் வழிபாட்டுத் தலமாக நிலை நிறுத்தவும் முனைப்பு காட்டி வருகிறார்.
குறிப்பாக, தற்பொழுது இந்த ஆலயத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்கவும் அயராது பாடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் இந்த பாரம்பரிய வழிபாட்டு தளத்தின் தற்போதைய நிலைபற்றி எடுத்துரைக்கவும் பொது மக்களுக்கு விளக்கம் அளிக்கவும் சமூக ஆர்வலருமான டாக்டர் ரமேஷ் நேற்றைய முன்தினம் முன்னிரவில் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அதன் அடிப்படையில் கோலாலம்பூரில் இருந்து செய்தியாளர்கள் அந்த ஆலயத்திற்கு சென்றபொழுது இந்த ஆலய வளாகத்தைச் சுற்றி உள்ளும் புறமுமாக ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் திரண்டு இருந்தனர்.
அதுவரை அமைதியாக இருந்த கூட்டத்தில் திடீரென சலசலப்பும் தள்ளுமுல்லும் ஏற்பட்டது.
ஆலய நுழைவாயிலில் நின்றிருந்த ஒரு சில இளைஞர்கள் செய்தியாளர்களை பார்த்து நீங்கள் எல்லாம் எதற்காக வந்திருக்கிறீர்கள்? ஆபாச படம் தயாரிப்பதற்காகவா வந்திருக்கிறீர்கள் என கேலியும் கிண்டலுமாக கேட்டு நையாண்டி புரிந்தனர். கூடியிருந்தவர்கள் கும்மாளமாக சிரித்தனர்.
தவிர இந்த ஆலயத்தின் ஆலோசகராக தற்பொழுது செயல்படுகின்ற டாக்டர் ரமேஷுக்கு எதிராக கூச்சலிட்டத்துடன் அவரை வெளியே வரும்படி கட்டாயப்படுத்தி உரக்கக் குரல் எழுப்பினர்.
இதற்கிடையில் சம்பவத்தைப் பற்றி அறிந்த காவல்துறையினரும் அங்கு வந்து விட்டனர்.
காவலர்களை பார்த்ததும் அமைதி அடைந்த கூட்டம் ஆலய வளாகத்தை சுற்றிலும் அங்கும் இங்குமாக கூடி நின்றன.
இதனால் செய்தியாளர்களை சந்திக்கும் சூழ்நிலை ஆலயத்திலோ ஆலய வளாகத்திலோ இல்லாததால் அருகில் உள்ள மஇகா தொகுதி அலுவலகத்திற்கு செய்தியாளர்களை வரவழைத்து அங்கு செய்தியாளர் கூட்டம் தொடங்கியதும் மீண்டும் தொகுதி அலுவலகத்தின் முன்பு திரண்டு சச்சரவிட்டனர்; உரக்க பேசியபடி மீண்டும் கும்பல் அங்கு திரண்டது.
அமைதியான சூழல் அறவே இல்லாததால் அங்கும் செய்தியாளர் கூட்டத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதற்கிடையில் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தல பிரச்சனை என்பதால் இதை நல்ல விதமாக பேசி, தீர்வு காணலாம் என்று எண்ணத்தில் ஆலயத்தின் முன்னாள் தலைவரை அழைத்ததாகவும் அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை; தொடர்பும் கொள்ள முடியவில்லை என்று தெரிவித்த டாக்டர் ரமேஷ் முன்னாள் செயலாளரும் பேச்சு நடத்த வரவில்லை என்று தெரிவித்தார்.
பழைய நிர்வாகக் குழுவினரை பொறுத்தவரையிலும் இந்த ஆலயத்தை சீரமைத்து நல்லபடியாக மக்களின் வழிபாட்டு தளமாக மீள உருவாக்கம் செய்வதில் முனைப்பு காட்டுகின்ற டாக்டர் ரமேஷ்மீது ஆதங்கம் கொண்டுள்ளதால் அந்தத் தரப்பினர் இதுபோன்று சச்சரவை எழுப்பி வருவதுடன் செய்தியாளர்களைப் பார்த்து ஆபாச படம் தயாரிக்க வந்திருக்கிறீர்களா என கேட்கும் நிலை எதனை உணர்த்துகிறது?
நம் இளைஞர்களிடையே ஆன்மீக பண்பும் சமய நன்னெறியும் எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்பதை சமூகமே ஊகம் செய்யட்டும்!.


