
மலேசிய இந்தியர்களின் சமூகத் தலைவர் பொன்.வேதமூர்த்தி, ‘இந்த உலகம் மனித குலத்திற்கு சொந்தமானது’ என்னும் கருத்தை தம் நட்பு வட்டத்தில் இன்று பகிர்ந்துள்ளார்.
அரசியல், ஆன்மிக, வரலாற்று, தத்துவ, அறிவியல் தளங்களைச் சார்ந்த சான்றோர் பெருமக்களின் முத்தான கருத்துகளை, குறிப்பாக மனிதநேயம் அல்லது மனுக்குலம் சார்ந்த கருத்தை ஹிண்ட்ராஃப் சரித்திர இயக்கத்தின் தலைவரும் மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவருமான பொன்.வேதமூர்த்தி தம் நட்பு வட்டத்தில் அன்றாடம் பகிர்ந்து கொள்வது வழக்கம்.
இன்று ஜனவரி 17-ஆம் நாள், ஆன்மிகத் தலைவரா அல்லது சமுதாயத் தலைவரா என்று அடையாளம் காண முடியாத தலாய் லாமாவின் கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
இந்த உலகம், அந்தத் தலைவர் அல்லது இந்தத் தலைவர் என எந்தத் தலைவருக்கும் சொந்தமானது அல்ல; அதைப்போல எந்த அரசருக்கும் அல்லது சிற்றரசருக்கும்கூட சொந்தமானது இல்லை இந்த உலகம்; மாறாக, ஒட்டுமொத்த மனுக்குலத்திற்கு சொந்தமானது இவ்வுலகம் என்னும் பொன்னான கருத்தை மேநாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி இன்று பகிர்ந்துள்ளார்.
இன்றைய ஜனவரி 17-ஆம் நாள், வரலாற்றுப் பெட்டகத்தின் ஏராளமான பக்கங்களை தன்னகத்தேக் கொண்டுள்ளது. அமெரிக்க மேதை பெஞ்சமின் ஃப்ராங்கிளின், கோடம்பாக்கத்தையும் ஜார்ஜ் கோட்டையையும் ஆண்ட எம் ஜிஆர், உலக குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி, ஈழத்து அரசியல்வாதியும் வழக்கறிஞருமான அ.தங்கதுரை போன்ற பெருமக்களுக்கும் இன்று பிறந்த நாள்!
அதைப்போல கம்ப இராமாயணத்தில் தேர்ந்த உரையாளரும் தமிழறிஞரும் சென்னை உயர் நீதிமன்ற மேநாள் நீதிபதியுமான மு.மு.இஸ்மாயில், நாதசுவர கலைஞர் எம்.எஸ். பொன்னுத்தாய், இதழாளரும் திராவிட இயக்க செயற்பாட்டாளருமான சாமிசிதம்பரம் போன்றோருக்கு ஜனவரி 17, நினைவு நாளும்கூட!


