
இயற்கையுடன் இயைந்த இசை அனுபவத்தை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நியோன் நிலவு 2.0’ இசை நிகழ்ச்சி, நாளை மறுநாள் சனிக்கிழமை (27ஆம் தேதி) மோரிப் கடற்கரையில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
முன்னதாக இந்த நிகழ்ச்சியின் முதல் பதிப்பான ‘நியோன் நிலவு 2.0’ அருவி ஓரத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில், இம்முறை கடற்கரைச் சூழலில் இசை ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மாலை 2:00 மணி முதல் இரவு 11:30 மணிவரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சிகளுடன், புதையல் தேடும் போட்டி உள்ளிட்ட பல்வேறு சுவாரசியமான போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் லாபம் முழுமையாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு குழந்தையின் சிகிச்சைக்காக வழங்கப்பட வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசை நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பிரபல பாடகர்களான வேல்முருகனும் அருள் பிரகாசமும் தங்களின் கலைப் படைப்புகளை வழங்கவுள்ளனர்.

அதேவேளையில் உள்ளூர் கலைஞர்களான சந்தேஷ், குமரேஷ் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டு பார்வையாளர்களை மகிழ்விக்கவுள்ளனர்.
நியோன் நிலவு 2.0 இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டு நிறுவனமான ஜெனிராவின் இயக்குநர் ரூபன், மேற்கண்ட தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
செந்தூலிலுள்ள ரூட்ஸ் 88 ஸ்போர்ட் பாரி’ல் இந்த நிகழ்ச்சியின் செய்தியாளர்க் கூட்டம் நடைப்பெற்றது. இந்த ‘ரூட்ஸ் 88 ஸ்போர்ட்’ நிறுவனம் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டு ஆதரவாளர்களில் ஒன்றாகும்.
இதற்கிடையில் இந்த நிகழ்ச்சியின் முதன்மை ஆதரவாளர்களான எசான் குரூப், புளு பிரதர்ஸ் என அனைத்து நிறுவனங்களுக்கும் ஜெனிரா நிறுவனத்தின் சார்பில் ரூபன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.



