
தாமான் மில்லேனியப் பகுதி எதிர்கொள்ளும் வெள்ள அபாயத்தை நீண்டகால அடிப்படையில் குறைப்பதற்காக, வடிகால் அமைப்பை மேம்படுத்துதல் மற்றும் மழைநீர் தேக்கக் குளம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடலையும் கள ஆய்வையும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் அண்மையில் மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் தாமான் மில்லேனியம் குடியிருப்பாளர் சங்க பிரதிநிதிகள், கிள்ளான் மாநகர் மன்ற உறுப்பினர்கள் தங்கராஜ், ரோய் ஞானேஸ்வரன், பொறியியல் துறை இயக்குநர் ஸைடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய தொழில்நுட்ப தேவை, மக்களின் கருத்தை நேரடியாக அறிந்தபின் அடுத்தக்கட்ட நகர்வை மேற்கொள்வது குறித்தெல்லாம் இந்தக் கலந்துரையாடலில் ஆலோசிக்கப்பட்டது.
நிகழ்வின்போது உரையாற்றிய டாக்டர் குணராஜ், உள்ளூர் மக்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்ய வெள்ளப் பிரச்சினைக்கு நீடித்த தீர்வு அவசியம் என்று வலியுறுத்தினார். உள்ளூர் நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே பயனுள்ள , நிலையான தீர்வை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த டாக்டர் குணராஜ், தாமான் மில்லேனியம் மக்களின் நலனுக்காக சிறந்த தீர்வை விரைவாக செயல்படுத்த தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.


