
கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழா, நேற்று நாமக்கல்லில் நடைபெற்றது. அதில், முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட டத்தோஸ்ரீ மு.சரவணன் கண்ணதாசன் நூற்றாண்டு விழா விருது வழங்கி பிறப்பிக்கப்பட்டார்.
மஇகாவின் தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், விருதைப் பெற்ற பின் சிறப்புரை ஆற்றினார்.
கவியரசு கண்ணதாசனின் இலக்கியப் பங்களிப்புகள், தமிழ்மொழி வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய அரும்பணிகள், காலத்தால் அழியாத அவர் படைப்புகளில் உள்ள சிறப்புகளை எல்லாம் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
மேலும், விருதுக்கான ஏற்புரையையும் நிகழ்த்தி, இந்த உயரிய அங்கீகாரத்தை வழங்கிய விழா ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பேராசிரியர் முனைவர் அரசு பரமேஸ்வரன், பசுமை சத்தியமூர்த்தி, மருத்துவர் குழந்தைவேலு, காந்தி கண்ணதாசன், பாரதி கிருஷ்ணகுமார் வி.பி. குமார் உள்ளிட்ட தமிழ் ஆளுமையர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


