
கட்டட வேலை மட்டும் அவசர அவசரமாக நடக்கிறது: பின்னனியில் இருப்பது ஊழலா?
ரவாங் தமிழ்ப்பள்ளியில் வெ.1.5 மில்லியன் நிதியில் 6 வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தைகா கட்ட மடாணி அரசாங்கம் கல்வி அமைச்சின் வாயிலாக நிதி ஒதுக்கியுள்ளது.
அதனை ரவாங் வட்டார மக்களும் பெற்றோர்களும் வரவேற்கும் அதேநேரத்தில் அந்தக் கட்டடம் திடலை பாதிக்கும் வண்ணம் கட்டப் படக்கூடாது என்பதே அவர்களின் நியாமான கோரிக்கை.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்துடன் மக்கள் சொல்லிப் பார்த்தார்கள்; கேட்கவில்லை. அதன் பின் ரவாங் மக்கள் அணி திரண்டு தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.
உடனே அங்கு விரைந்த மக்கள் பிரதிநிதி மற்றும் மாநிலக் கல்வி இலாகா அதிகாரியின் வருகையால் தற்காலிகமாக கட்டுமான வேலை நிறுத்தப்பட்டது.

அதன்பின் மலேசியக் கல்வி இலாக்கா இயக்குனர் பள்ளிக்கு வருகை புரிந்தார். அவரிடம் மக்கள் கொடுத்த கோரிக்கை என்வென்றால் ஏற்கனவே கறையான் அடித்து பயன்பாட்டில் இல்லாத கட்டடத்தை உடைத்து அதில் புதிய கட்டத்தை எழுப்புங்கள் என்பதுதான். அதைத் தவிர்த்து திடலுக்கு அருகே தற்காலிகமாக அமைக்கபட்ட கட்டட பகுதியை உடைத்து அங்கு புதிய கட்டடத்தை கட்டுங்கள் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இட வசதி இருக்கும்போது 1000 மாணவர்களைக் கொண்ட பள்ளியின் திடலில் கை வைப்பது நியாயம் இல்லை என தெரிவித்த மக்கள்
விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகள் மாணவர்களுக்கு அவசியமானது எனவும் அதனால் திடலில் கை வைக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டனர்.

உடனே இது தொடர்பாக கல்வி அமைச்சுடன் பேச்சு வார்த்தை நடத்துவோம்; ஒரு ஆக்கபூர்வமான முடிவை இரு வாரத்தில் எடுப்போம். அதுவரை தற்காலிகமாக வேலைகள் அனைத்தும் நிறுத்தப்படும் என தெரிவித்து ரமணா படம் போல் பேச்சு வார்த்தை நடத்திகிறோம் என்று 2 வாரம் படம் காட்டிவிட்டு கடந்த வெள்ளிக்கிழமை ‘நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தோம்; உடைத்துக்கட்ட நிதி இல்லை. அதேநேரத்தில், பள்ளிக் கட்டடம் விரைந்து கட்டப்பட வேண்டும். அதுவும் அதே இடத்தில் என தெரிவித்தது.
உடனே மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அந்த பழைய கட்டத்தை உடைத்துக் கொடுக்கும் அனைத்து செலவையும் நாங்களே வசூலித்து ஏற்படுத்தி கொடுக்கிறோம் எனவும் தெரிவித்தனர்.
உடனடியாக கடந்த வெள்ளிக் கிழமை ரவாங் தமிழ்ப்பள்ளிக்கு வந்த சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு பேச்சு நடத்தினார்.
அவருக்கு கல்வி அமைச்சின் கடிதத்தை காட்டி தலைமை ஆசிரியர் கட்டடம் அங்கு கட்டப்படுகிறது என்பதே கல்வி அமைச்சின் முடிவு என தெரிவித்தார்.
மக்கள் கோரிக்கையை கேட்ட பாப்பா ராயுடு பயன்படாத பழைய கட்டடம் மற்றும் தற்காலிக கட்டடம் இரண்டையும் பார்வையிட்ட பிறகு அதிலும் அதனை உடைத்து அப்புறப்படுத்தும் செலவையும் மக்களே ஏற்றூக்கொள்ள முன்வரும்போது..,
மக்களின் கோரிக்கை நியாமாக உள்ளது என தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக கல்வி அமைச்சருக்கு திங்கட்கிழமை கடிதம் அனுப்புவதாக பாப்பா ராயுடு மக்களிடம் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் நேற்று பாப்பா ராயுடு கடிதம் அனுப்பியுள்ள நிலையில் ,
இப்பொழுது அவசர அவசரமாக பள்ளியில் கட்டட வேலை தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் கோரிக்கைக்கும் மதிப்பு இல்லை மக்கள் பிரதிநிதியான ஓர் ஆட்சிக் குழு உறுப்பினர் கடிதத்திற்கும் மரியாதை இல்லை என்பதே இதன் வழி தென்படுகிறது.
ஆனால் வேலை மட்டும் அவசர அவசர நடப்பதின் பின்னனி என்ன ? ஊழலா?
யாரவது குத்தகை தொடர்பாக கையூட்டு பெற்றார்களா என்ற சந்தேகம் மக்கள் இடத்தில் இப்போது எழத் தொடங்கி விட்டது.
திடலும் எங்களுக்கு வேண்டும் கட்டடமும் எங்களுக்கு வேண்டும் இப்படி அவசர அவசரமாக வேலையை தொடங்குவது ஏன் என்ற நியாத்தைக் கேட்டு அதனை நிறுத்த ரவாங் மக்கள் பிரதமர் அலுவலகம் மற்றும் கல்வி அமைச்சின் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்தனர்.
செய்தி: வெற்றி விக்டர்


