
கோலாலம்பூர் கோர்ட்டுமலை அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானத்தின் கீழ் அமைந்துள்ள கோர்ட்டுமலை பிள்ளையார் ஆலயத்தின் ஆறாவது கும்பாபிஷேகம் வரும் 23ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயத்தில் யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு சமய நிகழ்வுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், கும்பாபிஷேக நாளில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
1963, 1975, 1987, 1999, 2012ஆம் ஆண்டுகளில் ஐந்து முறை இந்த ஆலயத்தில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்று முடிந்துள்ளன. கடந்த காலங்களில் நடைபெற்ற கும்பாபிஷேகங்களைக் காட்டிலும் இம்முறை பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்று டான்ஸ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
குறிப்பாக, கும்பாபிஷேக நாளில் சுமார் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு வாழை இலையில் உணவும், தேவைக்கேற்ப பொட்டல உணவுகளும் வழங்கப்படவுள்ளன.
அன்னதானத்திற்காக தயாரிக்கப்படும் உணவுகள் அனைத்தும் ஆலய வளாகத்திலேயே சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் ஆலயத்தின் புனிதத்தையும் தூய்மையையும் பாதுகாக்கும் வகையில், ஆலய வளாகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என டான்ஸ்ரீ ஆர். நடராஜா கேட்டுக்கொண்டார்.
பக்தர்கள் அதிகளவில் கூடும் என்பதால், உணவு மற்றும் குடிநீர் பொட்டலங்கள், பயன்படுத்தப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவற்றை கண்ட இடங்களில் வீசாமல், அதற்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் போட்டு ஆலய வளாகத்தின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இம்முறை ஜோகூர்பாரு, செனாயில் செனாயில் அமைந்துள்ள உலக கிருஷ்ண பக்தி இயக்கம்(ஸ்கோர்) சார்பில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் நாஜாராஜு கூறுகையில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைத்திருப்பது பெரும் பாக்கியம் என்றார்.
“நாங்கள் வழங்கும் அன்னதானத்தை பக்தர்கள் வந்து சாப்பிட்டு செல்ல வேண்டும். பக்தர்களுக்கு உணவு வழங்குவதை தங்களுக்குக் கிடைத்த பெரும்பேறாகக் கருதுகிறோம். அனைவரும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு இறையருளைப் பெற வேண்டும்,” என்றார்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயத்தில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் ஒழுங்கையும் ஆலயத்தின் தூய்மையையும் கடைப்பிடித்து, சமய நிகழ்வுகளில் பக்தியுடன் கலந்து கொள்ள வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


