
மலேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக நாடுகளிலேயே நம் மலேசியா பெற்ற சுதந்திரம் வித்தியாசமானது. அன்று மலாயாவாக இருந்த நாட்டின் 3 முக்கிய இனங்களுக்கும் அவர்களின் மொழி, கலாச்சாரம், மதம் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வழங்கப்பட்டது நமக்கான சுதந்திரம்.
அதனால்தான் நம் நாட்டின் மலேசிய அரசியல் சாசனத்தில் அனைத்து இனங்-களுக்குமான இன, சமய, மொழி, மத உரிமைகளும் இன்றுவரை நிலைநாட்டப் பட்டும் பாதுகாக்கப்பட்டும் வந்திருக்கின்றன.
அதுமட்டுமல்ல! நம் சுதந்திரம், ரத்தம் சிந்தா-மல், போராட்டங்கள் நடத்தாமல் பேச்சு வார்த்தைகளின் மூலம் மட்டுமே அன்றைய மூத்த முன்னோடித் தலைவர்களால் பெறப் பட்டதாகும். அவர்கள் வகுத்த தூரநோக்குச் சிந்தனைகள் அடிப்படையிலும் – ஒற்றுமை, புரிந்துணர்வு, மற்ற இன, சமயங்களையும் மொழி, கலாச்சாரங்களையும் மதிக்கும் அடிப்படையிலும் – நமக்கான சுதந்திரம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.
சுதந்திரத்திற்கான பேச்சுவார்த்தைகளின் போது உறுதிமொழி வழங்கப்பட்ட எல்லா அம்சங்களும் பின்னர் மலேசிய அரசியல் சாசனத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

உலக நாடுகள் பிரிவினையைக் கண்ட ஒரு காலகட்டத்தில் சபா, சரவாக், சிங்கப்பூர் பிரதேசங்களை இணைத்துக் கொண்டு மலாயா – மலேசியாவாக உருவெடுத்தது.
இவ்வாறு உலகம் காணாத பல புதிய திசைகளில் பயணம் செய்துவந்திருக்கும் நம் நாடு இன்றுவரை பல்வேறு பிரச்சனைகளுக்கும் இடையிலும் வலுவாக உலக அரங்கில் திகழ்வதற்குக் காரணம், நாம் கடைப்பிடித்து வரும் ஒற்றுமை, சகிப்புத் தன்மை, மற்ற இன, மதங்களை மதித்தல் போன்றவைதான் என்பதை இன்றைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த அடிப்படையில் நம் மூத்த தலைவர்கள் வகுத்தப் பாதையில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நாட்டை முன்னேற்றுவோம் என இந்த சுதந்திர நாளில் உறுதி கொள்வோம்.
அரசாங்கம் அடிக்கடி வலியுறுத்தி வருவது போல், அரசவம்ச உரிமைகள், சமயம், இனம் ஆகிய 3 அம்சங்களில் கருத்துப் பரிமாற்றம் செய்யும்போது, கவனத்துடன் செயல்பட்டு, ஒருவரை ஒருவர் மதித்து நம் பயணத்தைத் தொடர்ந்து வந்தாலே, நம் நாடு தொடர்ந்து மத நல்லிணக்கம், பொருளாதார வளர்ச்சி போன்ற அம்சங்களில் பீடு நடை போடும் என உறுதியாக நம்பலாம்.
இந்த சிந்தனைகளுடன் நமது சுதந்திர தினத்தை வரவேற்போம். அனைவரும் ஒன்றாக உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வோம். மற்ற மத, இன, கலாச்சாரங்-களை மதிப்போம். நாட்டை வளர்ச்சிப் பாதைக்குத் தொடர்ந்து கொண்டு செல்ல ஒன்றிணைந்து பாடுபடுவோம். நமது ஒற்றுமையே வெற்றிக்கான அடையாளம்.
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!
தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
தேசியத் தலைவர்
மலேசிய இந்தியர் காங்கிரஸ்
31 ஆகஸ்ட் 2026


