
கோர்ட்டுமலை பிள்ளையார் ஆலய திருக்குட நன்னீராட்டு விழா தொடர்பில் வெளியான அவதூறுகளுக்கு அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர் கோர்ட்டுமலை அருள்மிகு பிள்ளையார் ஆலய குடமுழுக்கு விழா தொடர்பில் தன்னையும் ஆலய நிர்வாகத்-தையும் குறிவைத்து பல்வேறு அவதூறான தகவல்கள் வெளியிடப்படுவதாக, கோலா-லம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்து உள்ளார்.

கும்பாபிஷேகத்திற்காக வசூலிக்கப்பட்ட வெ.78 லட்சம் வெள்ளியில் மோசடி செய்யப் பட்டதாக சில தரப்பினர் பொய்யான குற்றச் சாட்டுகளை முன்வைத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஆலய திருப்பணிக்காக பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் செலவு தொடர்பான அனைத்து விபரங்களும் ஏற்கெனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“வசூல் செய்யப்பட்ட தொகை, குடமுழுக்கு விழாவிற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் செலவுகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் நாங்கள் தெளிவாக தெரிவித்துவிட்டோம். அப்படியிருக்கும் போது, மீண்டும் மீண்டும் ஏன் பொய்யான செய்திகளை வெளியிடுகிறார்கள்?” என அவர் கேள்வி எழுப்பினார்.
கும்பாபிஷேகம் என்பது ஆலயங்களில் வழக்கமாக நடைபெறும் ஒரு முக்கியமான சமய நிகழ்வு என்றும், பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம் என்றும் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்தார்.

ஆலய திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேக ஏற்பாடுகள் அனைத்தும் முறையான நடை-முறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப் பட்டதாகவும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, தம்முடைய புகைப்படத்துடன் மகன் சிவக்குமாரின் புகைப்படத்தையும் இணைத்து, ‘அப்பா–மகன் மோசடி’ என்ற வகையில் அவதூறுகளைப் பரப்புவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.
ஆலய திருப்பணிக்கான நன்கொடையாக மொத்தம் வெ.5.8 மில்லியன் கிடைத்துள்ள-தாகத் தெரிவித்த டான்ஸ்ரீ ஆர்.நடராஜா, இதில் வெ.4.8 மில்லியன் ரொக்கமாகவும், 1.75 கிலோ தங்கமாகவும் கிடைத்ததாக விளக்கமளித்தார்.

இதுவரை ஆலய திருப்பணி மற்றும் கும்பா-பிஷேகம் தொடர்பான பணிகளுக்காக வெ.34லட்சத்து 94ஆயிரத்து127வெள்ளி 90சென் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், மண்டலாபிஷேகம் நிறைவடைந்த பின்னரே திருப்பணி மற்றும் கும்பாபி-ஷேகம் தொடர்பான முழுமையான வரவு–செலவு கணக்குகள் இறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
அதன் பின்னர், ஆலயத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் கணக்குகள் முறையாக பரிசீலிக்கப்பட்டு, தேவையான நகல்கள் ஆடிட்டர் ஜெனரல் (AG) அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்படும் எனவும் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்தார்.

ஆலய நிதியில் முறைகேடு அல்லது மோசடி நடைபெற்றுள்ளதாக யாரிடமும் ஆதாரம் இருந்தால், அதனை உரிய முறையில் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்தார்.
“மோசடி நடந்திருக்கிறது என்று கூறுபவர்-கள், ஆதாரத்துடன் உறுதிப்படுத்தட்டும். உண்மையில் மோசடி நடைபெற்றிருப்பது நிரூபிக்கப்பட்டால், அன்றே நான் பதவியைத் துறக்கத் தயாராக இருக்கிறேன்,” என டான்ஸ்ரீ ஆர்.நடராஜா திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஆலயத்தின் நிதி நிருவாகம் மற்றும் திருப்பணிகள் தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருவதாகவும், கணக்குகள் உரிய முறையில் பரிசீலிக்கப் பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்-பிக்கப்படும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
எனவே, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் தனிநபர்களை குறிவைத்து வெளியிடப் படும் அவதூறுகளையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.


