
கோலாலம்பூர் செந்தூல் அருள்மிகு அக்னி முனீஸ்வரர் ஆலய பராமரிப்பில் 15 பூக்கடைகள் கோலாலம்பூர் மாநகர் மன்ற அனுமதியுடன் செயல்படுவதாகவும் அவற்றில் ஒரு கடையின் உரிமையாளர் மாறுபாட்டுடன் நடந்து கொள்வதால் அந்தப் பூக் கடையை காலி செய்துவிட்டு ஆலய நிர்வாகத் திடமே ஒப்படைக்க வேண்டும் என்று பலமுறை கேட்டும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மறுப்பு தெரிவித்து வருவதாக ஆலயத் தலைவர் அ. குணாளன் தெரிவித்தார்.
இந்த நிலையில் அவருக்கு ஒருசில அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவிக்கும் அதேவேளை, தங்களின் ஆலய நிர்வாகத்திற்கும் எதிராக குரல் கொடுப்பதாக குணாளன் ஊடகத்தாரிடம் நேற்று தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பூக்கடையில் பல்லாயிரக் கணக்கில் மலர் வியாபாரம் நடைபெறுகிறது. தவிர, அந்தப் பெண்ணுக்கும் சொந்தக் கோயில் இருப்பதால் அந்த இடத்தில் பூக்கடையை மாற்றிக் கொள்ளும்படி பலமுறை நல்லவிதமாக கேட்டுக் கொண்ட பின்னும் அவர் மறுத்து வருகிறார்.
தற்பொழுது அருள்மிகு அக்னி முனீஸ்வரர் ஆலயத்தில் திருப்பணி நடைபெற இருப்பதால் சம்பந்தப் பூக்கடை தங்களுக்கும் தேவைப்படுவதாகக் குறிப்பிட்ட குணாளன், அந்தப் பூக்கடையின் மூலம் தங்களின் ஆலயத்திற்கும் நிதி ஆதாரம் ஏற்படும் என்று தெரிவித்தார்.
இந்தச் சிக்கல் குறித்து கோலாலம்பூர் மாநகர் மன்றத்திடமும் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கடையை காலிசெய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்ப்பட்டுள்ளது.
அதற்கான அவகாசம் என்னும் சிறிது நாட்கள் இருக்கின்ற நிலையில் அண்மையில் ஒருசில அரசியல் கட்சியினர் சம்பந்தப்பட்ட பூக்கடை வியாபாரிக்கு ஆதரவாகவும் ஆலய நிர்வாகத்திற்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இத்தகைய போக்கு தவிர்க்கப்பட வேண்டும் என்று ஊடகத்தின்வழி கேட்டுக் கொள்வ-தாக குணாளன் மேலும் தெரிவித்தார்.


