
நாட்டின் பத்தாவது பிரதமரும் மடானி ஒற்றுமை அரசாங்கத்தை வழிநடத்துபவருமான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராகிம் பத்து மலையில் கொண்டாடப்படும் தைப்பூசை விழா தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை, பிப்ரவரி ஏழாம் நாள் பிற்பகலில் பத்துமலை திருத்தலத்திற்கு வருகை மேற்கொள்கிறார்.
இந்தத் தகவலை கேட்டது முதல் பத்து மலை திருத்தல வளாகத்தில் உற்சாக வெள்ளம் கரைபுரளுகிறது.
உலகப் புகழ் பெற்ற பத்து மலை தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்ளும்படி கடந்த 2023 முதலே கோலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானத்தின் சார்பில் கோரிக்கையும் அழைப்பும் விடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு தைப்பூசத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார்.

கோயில் யானை வருவதற்குமுன் மணியோசை கேட்பதைப் போல இது பற்றிய அறிவிப்பை இரண்டு தினங்களுக்கு முன்பே மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச விக்னேஸ்வரன் அறிவிப்பு செய்திருந்தார் ஆனால் தைப்பூசத்து அன்றா அல்லது அதற்கு பின்னரா அல்லது முன்னரா என்பது குறித்து உறுதி செய்யப்படாத நிலையில் இப்போது தைப்பூசத் திருநாளுக்கு நான்கு தினங்களுக்கு முன்பாகவே பிரதமர் வருகை தருகிறார்.
இன்று பிப்ரவரி ஏழாம் நாள் பிற்பகல் 3:00 மணி அளவில் பத்து மலையை திருமுருக திருத்தலத்திற்கு வருகை தரும் பிரதமரை தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர் நடராஜா எதிர்கொண்டு வரவேற்று பத்து மலைத் திருத்தலம் கண்டுள்ள மேம்பாட்டு பணிகளை சுற்றி காண்பிக்கவிருக்கிறார் அதன் பிறகு பத்துமலை வளாக அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பும் இடம்பெற இருக்கிறது.

இந்த நிலையில் பிரதமரை வரவேற்க பக்த அன்பர்களும் பொதுமக்களும் திரளாக வருகை தரும்படி நடராஜா கோரிக்கை வைத்துள்ளார்
தைப்பூச திருவிழாவிற்கு ஒரு பிரதமர் வருவது என்பது நீண்ட இடைவெளிக்கு பிறகு இடம்பெறுகின்ற ஒரு நல்ல செய்தியாகும்.
நாட்டின் ஆறாவது பிரதமராக இருந்த டத்தோஸ்ரீ நஜப்பிற்கு பிறகு பத்துமலை தைப்பூச விழாவில் கலந்து கொள்ளும் அடுத்த பிரதமராக அன்வர் திகழ்கிறார்.


