
இந்திய திரையுலகின் ஆற்றல்மிகு அடையாளமும் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியவருமான ‘பாடும் நிலா’ எஸ் பி பாலசுப்பிரமணியனின் பெயரை சென்னையில் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு சாலைக்கு தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சூட்டினார்
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் பெயரை, அவர் வாழ்ந்த நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள காம்தார் நகர் முதன்மை சாலைக்கு சூட்ட வேண்டும் என்று அவரின் குடும்பத்தாரும் ரசிகர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதனை நிறைவேற்றும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காம்தார் நகர் முதன்மை சாலைக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை’ என்று பெயர் சூட்ட உத்தரவிட்டார்.
அதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில்,
‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை’க்கான வழிகாட்டிப் பலகையை நேற்று நுங்கம்பாக்கத்தில் திறந்து வைத்தோம் என்று மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தெரிவித்தார்.
“எஸ்.பி.பி.யின் திருவுருவப் படத்துக்கு மரியாதை செய்து, அவரின் குடும்பத்தாருக்கு நினைவுப் பரிசையும் வழங்கினோம்”.
காற்றில் கானமாக வாழ்ந்து கொண்டிருக்கும் எஸ்பி பால சுப்பிரமணியனின் புகழ் ஓங்கட்டும் என்றும் துணை முதல்வர் குறிப்பிட்டார்.
தகவல்: முரசு ரமேஷ்


