Wednesday, May 13, 2026

உலு சிலாங்கூர் மாவட்ட செந்தமிழ் விழா!

கோல குபு பாரு தமிழ்ப்பள்ளி சுழற் கிண்ணத்தை வென்று சாதனைபடைத்த உலு சிலாங்கூர் மாவட்ட செந்தமிழ் விழா இன்று கலும்பாங் தமிழ்ப் பள்ளி வளாகத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டாரின் உள்ளத்தை வருடிய இந்த செந்தமிழ் விழா இன்று களும்பாங் தோட்ட தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்மொழியின் வளர்ச்சியையும் மாணவர்களின் மொழித்திறனையும் மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இவ்விழாவில் மாவட்டத்திலுள்ள 9 தமிழ்ப்பள்ளி மாணவர்களும் 3 தேசியப் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகச்சிக்கு சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்மொழிப் பிரிவின் உதவி இயக்குநர் ப. விஜயலெட்சுமி சிறப்பு வருகை புரிந்தார்.

நான்கு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் உலு சிலாங்கூர் வட்டாரத்தி-லுள்ள 9 தமிழ்ப்பள்ளிகளும் 3 தேசியப் பள்ளிகளும் கலந்து கொண்டன. மொத்தம் 52 மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கோலா குபு பாரு தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த டசாலினி லிங்கேஸ்வரன் முதல் இடத்தை-யும், சுங்கை சோ தமிழ்ப்பள்ளியின் பகவஹரணி குமரேசன் இரண்டாம் இடத்தையும், கோல குபு பாரு தமிழ்ப்பள்ளியின் காவியா நாகேந்திரன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

தேசியப் பள்ளி மாணவர்களுக்கான கதை சொல்லும் போட்டியில் பத்தாங் காலி தேசியப் பள்ளியின் திவ்யஸ்ரீ முதலிடமும், அதேப் பள்ளியின் டித்திகா இரண்டாம் இடமும் ராசா தேசியப்பள்ளியின் சிவன்யா கோர் மூன்றாம் இடமும் பெற்றனர்.

கவிதை ஒப்புவிக்கும் போட்டியில் எஸ்கோர்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் டிவனேஸ்வரன் கணேசன் முதலிடத்தையும், கோல குபு பாரு தமிழ்ப்பள்ளியின் கெஸ்வின் நரேந்திரன் இரண்டாம் இடத்தையும், நிலக்‌ஷானா லோகேஸ்வரன் மூன்றாம் இடத்தையும் வென்றனர்.

தமிழ்மொழி பேச்சுப் போட்டியில் கோல குபு பாரு தமிழ்ப்பள்ளியின் ரக்‌ஷித்தா கிருஷ்ணகுமார் முதல் இடத்தையும், ஜஸ்னவி சந்திரசேகரன் இரண்டாம் இடத்தையும், சுங்கை சோ தமிழ்ப்பள்ளியின் ஷர்வின் வில்ஸ் போல் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

மேலும், போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாநில ரீதியிலான செந்தமிழ் விழாவின் சுழற்கிண்ணத்தை கோல குபு பாரு தமிழ்ப்பள்ளி தட்டிச் சென்றது.

தொடர்ந்து சுங்கை சோ தோட்ட தமிழ்ப்பள்ளி, எஸ்கோர்ட் தோட்ட தமிழ்ப்பள்ளி, களும்பாங் தோட்ட தமிழ்ப்பள்ளி மற்றும் புக்கிட் பெருந்தோங் தமிழ்ப்பள்ளிகள் சிறந்த பள்ளிகளின் பட்டியலில் இடம்பிடித்தன.

தமிழ்மொழியின் தொன்மை மற்றும் வளர்ச்சிக்காக இதுபோன்ற விழாக்களும் போட்டிகளும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் இதன் மூலம் மாணவர்களின் மொழியாற்றல் மேலும் மேம்படும் என்றும் களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் சிவகாமி சுந்தரி தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை