
இந்த நாட்டில் சைவம் மேலும் தழைக்கவும் திருமுறையின் புகழ் ஓங்கவும் நம் சமயம் காக்கப்படவும் திருமுறை மாநாட்டை மலேசிய இந்து சங்கம் கடந்த ஒன்றாம் இரண்டாம் நாட்களில் சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் பேரளவில் நடத்தியது.
இந்தத் திருமுறை மாநாட்டிற்கு தேசிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இதில் கலந்துகொண்டதுடன் சங்கத்தின் முயற்சிக்கு ஆதரவும் வழங்கிய மலேசிய இந்தியர் காங்கிரஸ்-ம.இ.கா. தேசிய துணைத் தலைவரும் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக இணை வேந்தருமான டத்தோஸ்ரீ டாக்டர் சரவணன் அவர்களுக்கு மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக மலேசிய இந்து சங்க தேசிய துணைத் தலைவர் கு. கணேஸ் பாபு தெரிவித்துள்ளார்.

தவிர இந்த மாநாட்டில் மலேசிய இந்து சங்கத்தின் உயரிய விருதான ‘சங்கரத்னா’ விருது முன்னாள் அமைச்சருமான சரவணன் அவர்களுக்கு வழங்கப்பட்டதை மனமுவந்து ஏற்றுக் கொண்டதற்காக அவருக்க்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக இந்த இரு நாள் திருமுறை மாநாடு எல்லா வகையாலும் சிறப்பாக நடைபெற்றதற்கு அடியேன் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்து சமூகத்தின் ஒற்றுமை, பண்பாடு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு இந்த மாநாடு மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளது.
தேசியத் தலைவர், மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் உமாசுதன், திருமுறைக் குழுத் தலைவர் ‘தேவார நாயகன்’ ஜெயமாறன் தில்லை, அவர்தம் குழுவினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் மனமார்ந்த பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்வதாக இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கணேஸ் பாபு மேலும் தெரிவித்துள்ளார்.
தவிர, இந்த மாநாட்டின் தொடர்பில் அனைத்து வகையாலும் தேவையான உதவி செய்து தோள்கொடுத்த மலேசிய இந்து சங்க தேசிய பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்கள், வட்டாரப் பேரவை பொறுப்பாளர்கள், சங்க உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த வேளையில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும்தான் இந்த மாநாட்டை இந்த அளவிற்கு வெற்றிகரமாக நடத்த உதவியுள்ளது.
எல்லாம் வல்ல சிவபெருமான் உங்கள் அனைவருக்கும் எல்லா வளத்தையும் தந்து மேலும் சமயப் பணி செய்வதற்கு ஏதுவாக நீண்ட ஆயுளை வழங்கி அருள் வழங்கிட வேண்டி பரம்பொருளை வணங்குகின்றேன் என்று மலேசிய சர்வ சமயமன்ற உதவித் தலைவருமான கணேஸ் பாபு தெரிவித்துள்ளார்.


