
படித்தவர்கள் செய்கின்ற போக்கிரித்தனமும் காலடித்தனமும்தான் உலகில் மிகுதியாக இருக்கிறது.
தகவல் பல்லூடகத் துறையை சேர்ந்தவர்கள் சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய எவ்வளவோ நற்பணிகள் இருக்கின்ற வேளையில், மலேசியாவில் வாழ்கின்ற இந்து சமய மக்களையும் குறிப்பாக சைவ சமயக் கொள்கையை இழிவுபடுத்தும் விதமாக ஒரு சிலர் நடந்து கொண்டுள்ளனர்.
நாட்டில் அண்மையில் கொண்டாடப்பட்ட தைப்பூசத் திருவிழா தொடர்பான காவடியையும் காவடி ஆட்டத்தையும் பகடி செய்து காணொளி வெளியிட்டுள்ளனர். இது நாட்டில் தற்போது பெரும் சர்ச்சையாகி வருகிறது.
மலேசியாவில் வாழ்கின்ற இந்துப் பெருமக்கள் கொண்டாடும் முக்கியமான சமயப் பண்டிகையான தைப்பூசத் திருநாளை அண்மையில்தான் கொண்டாடினர்.
தைப்பூசத் திருவிழா என்றாலே அது காவடியுடன் தொடர்புடையது என்பதை இந்து சமயத்தினர் மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள பிற சமயத்தினரும் நன்கு அறிவர்.
இந்த நிலையில் ‘ஏரா’ பண்பலை வானொலி நிலையத்தைச் சேர்ந்த ஒரு சில பணியாளர்கள் காவடி ஆட்டத்தை பகடி செய்து காணொளி காட்சி தயாரித்து சமூக ஊடகத்தில் வெளியிட்டு, அது பரவலாக சென்றடைந்துள்ளது.

இதன் தொடர்பில் மஇகா பணிப் படையினர், மஇகா மத்திய செயலவை உறுப்பினர் எண்ட்ரூ தலைமையில் இன்று மாலை கோலாலம்பூர் டாங் வாங்கி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
சம்பந்தப்பட்ட ஆடவர்கள் மீது பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தாலும் அதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது; சகித்துக் கொள்ள முடியாது என்று மஇகா பணிப் படையினர் மேலும் தெரிவித்தனர்.
இத்தகையத் தரப்பினர்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதுவரை நாங்கள் காத்திருப்போம். அதன்பிறகு அடுத்தக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; மலேசியத் தகவல் பல்லூடகச் சட்டம் 255வது பிரிவின்படியும் மூன்று ‘ஆர்’ சட்டத்தின் படியும் சம்பந்தப்பட்ட தரப்பினர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டதாக எண்ட்ரு மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


