
இன ஒற்றுமைதான் மலேசியர்களாகிய நம் வலிமை என்பதால் நோன்பு பெருநாள் காலம் மட்டுமன்றி எல்லா காலத்திலும் இன ஒற்றுமையை ஒரு போதும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்று நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ம.இ.கா. தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நாட்டில் மலாய்க்காரர்கள், இந்தியர்கள், சீனர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். இதனை ஒருபோதும் கைவிடாமல் ஒன்றாக கைகள் கோத்து, நாம் அனைவரும் ‘மலேசியர்கள்’என்ற அடிப்படையில் நோன்பு பெருநாளைக் கொண்டாடுவோம் என்று தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளபோதிலும் இனங்களுக்கு இடையில் ஒற்றுமை சீர்குளையவில்லை என்பதுதான் உண்மை. இந்த சூழ்நிலையை ஒரு சில தரப்பினர் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினாலும் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை வலுவாக இருப்பதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
நாம் அனைவரும் மலேசியர்கள். மலேசியாவில் மட்டுமே பல்லின மக்கள் ஒருமித்து வாழ்வதைக் காண முடிகிறது. இவர்கள் அனைவரும் தொன்றுதொட்டு ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலத்தில் தோட்டப்புறங்களில் பல இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்தனர். அந்த நிலை தொடர்ந்து நிலைபெற்று வருவதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவில் வாழ்கின்ற பல்லின மக்கள் அனைவரும் விருந்துபசரிப்பு நடத்தி கொண்டாடி மகிழ்கின்றனர்.
பல இன மக்களும் பல சமயத்தினரும் ஒருமித்துவாழும் இந்த மலேசியத் திருநாட்டில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான நோன்பு பெருநாள் இன நல்லிணக்கத்தை மேம்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இந்த இனிமையான இன்பத் தருணத்தில் ம.இ.காவின் சார்பிலும் தன் குடும்பத்தின் சார்பிலும் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்தை தெரிவித்துக் கொண்டுள்ளார்.


