
மலேசிய இந்து சங்கம், நிறுவனச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், இந்துக் கோவில் பிரதிநிதிகளை ஒன்று சேர்க்க வரும் ஞாயிற்றுக்கிழமை(6-04-2025) தேசிய அளவில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. அதற்கான் உரிமையும் தகுதியும் இந்து சங்கத்திகு உண்டு.
இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், பல இந்து கோவில்கள் பதிவு செய்யப்படாத நிலையில் உள்ளமைக்கான சட்டப்பூர்வ நிலைபற்றி விவாதிப்பதாகும். இது கோவில் நிர்வாகங்களின் தவறால் அல்ல; மாறாக நிர்வாகக் குழப்பங்களால் ஏற்பட்ட பிரச்சனையாகும்.
முக்கிய விவாதப் பொருளாக கோலாலம்பூர் ‘மஸ்ஜித் இந்தியா’ பகுதியில் உள்ள அருள்மிகு தேவி பாத்ரகாளியம்மன் கோவிலின் நிலை மற்றும் அதன் இடமாற்றம் தொடர்பான சர்ச்சை இருக்கும்.
சில இந்துக் கோவில்கள் ‘சட்டவிரோதம்’ என இணையதளத்தில் குறிக்கப் பட்டிருப்பதை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உரிமை அரசியல் இயக்க துணைத் தலைவர் டேவிட் மார்ஷல், கேட்டுக் கொண்டிருக்கிறார்.
உண்மைக்கு புறம்பான வகையில் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள இந்துக் கோவில்களின் வரலாறு மற்றும் சமூக-அரசியல் பின்னணியை கவனிக்காமல், அவை எவ்வாறு தோன்றியுள்ளன என்பதைக் கணக்கில் கொள்ளாமல் இந்தக் கூற்று முன்வைக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் குடியேற்றக் காலத்தில் தனியார் தோட்டங்களில் கட்டப்பட்ட கோவில்களாகும்.
கோவில்களின் சட்டபூர்வமான நிலை என்பது நிர்வாகக் குழுக்களின் தனிப்பட்ட முடிவால் இல்லை. மாறாக, மாநில மற்றும் நகராட்சி அதிகாரிகள் எடுத்த முடிவுகளால் உருவாகிய பிரச்சனை.
அரசு வசதிக்கேற்ப கோவில்களை ‘சட்டவிரோதம்’ என வகைப்படுத்தப் பட்டு, அதை சாக்காகக்கொண்டு, கோவில்கள் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற தடைஏற்படுத்தப்பட்டு, அரசத் தரப்பில் மறுப்பும் தெரிவிக்கப்படுகிறது. மஸ்ஜித் இந்தியா பகுதியில் உள்ள 130 ஆண்டுகள் பழைமையான பத்ரகாளியம்மன் கோவில் இதற்கு உதாரணம்.
இந்தக் கோவில் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற முயற்சி செய்யாமல் இருந்ததால் ‘சட்டவிரோதம்’ ஆனது அல்ல. மாறாக, கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற-DBKL அதிகாரிகள் இதற்கான பதிவு நடவடிக்கையை மறுத்ததே இந்த நிலைக்குக் காரணம்.
இந்த சூழ்நிலைக்கு மேலும் ஒரு சிக்கல் ஏற்படுத்தும் விடயம், இந்த கோவில் நிலம் JEKAL வர்த்தக நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாகும். இதற்கான நோக்கம் என்ன?
மலேசிய இந்து சங்கம், அனைத்து இந்து கோவில்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக தன்னைச் சித்தரிக்கிறது. ஆனால், இது ஒரு தன்னார்வ சமய அமைப்பு என்பதால், அதன் அதிகாரம் வரம்புக்கு உட்பட்டதுதான்.
தேசிய இந்து அறப்பணி வாரியம்(National Hindu Endowments Board) அமைக்க அரசு மறுத்துவருவது, கோவில் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க அரசாங்கம் மறுப்பதை உறுதிப்படுத்துகிறது.
ப. இராமசாமி
தலைவர், உரிமை
ஏப்ரல் 1, 2025


