
பட்டர்வொர்த், ஏப்.16 -பினாங்கு இந்தியர் சமூகத்தின் வியாபார முன்னேற்றம் மற்றும் இளைஞர்களின் தொழில்முனைவு வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்குடன் பினாங்கு இந்தியர் வர்த்தக தொழிற்சங்கத்தின் தலைவர் டத்தோ எஸ். பார்த்திபன் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
நாடு தழுவுய நிலையில் இந்திய இளைஞர்கள் அதிகளவில் வியாபாரத் துறையில் ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நடப்பு மடானி அரசாங்கம் இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு உதவிகளை வழங்கத் தயாராக உள்ளது. அந்த வாய்ப்புகளை நாமே தெளிவாக அறிந்து, முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டத்தோ பார்த்திபன் தெரிவித்தார்.

பினாங்கு இந்தியர் வர்த்தக தொழிற்சங்கத்தின் தலைவர் என்ற வகையில், இந்திய சமூகத்திற்கு வியாபார வாய்ப்புகளை உருவாக்கத் தயார் எனவும் அவர் உறுதி கூறினார்.
அண்மையில், 86 சிறு வியாபாரிகளுக்கு அவர்களின் தொழில் தேவைக்கேற்ப வெ.5,000 மதிப்பிலான வியாபாரப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் பினாங்கு வர்த்தக சங்கம் மற்றும் மித்ரா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் டத்தோ பார்த்திபன் தலைமையில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உதவித் திட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார்.
மேலும், பினாங்கு இந்தியர் வர்த்தக சங்கம் நிலைத்த வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது. பினாங்கு பெருநிலத்தில் சங்கத்திற்கென சொந்தக் கட்டடம் அமைக்கும் முயற்சி நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவித்த டத்தோ பார்த்திபன்,
இன்றைய இளைஞர்கள் சமூக ஊடகங்களில் வெறுமனே கருத்து தெரிவிப்பதில் நேரத்தை கடத்தாமல், வியாபாரத் துறையில் தடம் பதிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
தொழிலில் இடம்பிடிக்க புதிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து, டத்தோ எஸ். பார்த்திபனின் பிறந்த நாள் விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பினாங்கு செபராங் ஜெயா பகுதியில் உள்ள ஜெயா கெட்டரிங் உணவக அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, அலை ஒளி தமிழ் ஊடகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ்விழாவில் அலை ஒளி இயக்குநர் ஆர். இரமணி, எழுத்தாளர் செ. குணாளன், பினாங்கு குற்றத் தடுப்பு அறவாரிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ கா. புலவேந்திரன், டத்தோ காளிஸ்வரன், வர்த்தக சங்க உதவித் தலைவர் டத்தோ மரியதாஸ் கோபால், மஇகா பினாங்கு மாநிலத் தலைவர் டத்தோ ஜெ. தினகரன், ஐ.பி.எப். பினாங்கு மாநிலத் தலைவர் ச. குமரேசன், டாக்டர் ஹபீப் ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இதே நிகழ்வில், பினாங்கு அலை ஒளி கூட்டுறவுக் கழகத்தின் அதிகாரப்படியான அங்கீகாரமும் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் வெ. 23,000 மதிப்பிலான பங்குதாரர் முதலீட்டுத் தொகைக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இந்த புதிய தொடக்கம், பினாங்கு இந்தியர் சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.
பினாங்கு இந்தியர் வர்த்தக சங்கம் இந்திய இளைஞர்களுக்காக ஏற்படுத்தும் முயற்சி, சமூகத்தின் வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று அலை ஒளி குழுமத்தின் தலைவர் மா.முனியாண்டி விவரித்தார்.
கல்வியாளர் முனைவர் க.உதயக்குமார் நிகழ்ச்சியை நெறிப்படுத்தி வழிநடத்தினார்.
தகவல்: அகல்யா


