
மலேசிய இந்திய சமுதாயத்தின் எதிர்கால மீட்சிக்கும் மேன்மைக்கும் கல்வி ஒன்றுதான் உற்ற துணையாக இருக்கும் என்று எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வேந்தர் டான்ஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் உறுதிபட தெரிவித்தார்.
மலேசிய இந்தியர்களின் அரசியல் நலனுக்காக அரசியல் இயக்கத்தை வழிநடத்தும் அதேவேளை, மலேசிய இந்திய மாணவர்களின் கல்வி நலம் சார்ந்து பன்னாட்டுத் தரத்திலான
உயர்கல்வி நிலையம், தொழில்நுட்ப பயிற்சி நிலையம், கல்விக் கழகம் ஆகியவற்றை வெளிநடத்தி வருகிறது.
குறிப்பாக மலேசிய தமிழர்களின் கல்வி நலம் சார்ந்து தமிழ்ப் பள்ளிகளின் உருமாற்றத்திலும் கட்டமைப்பிலும் தொடர்ந்து ஈடுபாடும் அக்கறையும் செலுத்தி வருகிறது என்று விக்னேஸ்வரன் கூறினார்.

இரு தினங்களுக்கு முன்பு ஏப்ரல் 16-ல், செத்தியா ஆலாம் நோர்த் ஹம்மோக் தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு ம.இ.கா., தன் கல்விக் கழகத்தின் மூலம்(MIED)
50 ஆயிரம் வெள்ளி நன்கொடை அளித்ததும் இதன் அடிப்படையில்தான் என்று அவர் தெரிவித்தார்.
மலேசிய இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் மறுமலர்ச்சிக்காகவும் குறிப்பாக உயர்கல்வி தேவைக்காக உருவாக்கப்பட்ட எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில் நாடு முழுவதும் அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் இந்த நேரத்திலும் கூட நாட்டின் பழம்பெறும் பள்ளிகளில் ஒன்றான செத்தியா ஆலாம், நோர்த் ஹம்மோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் அமைந்துள்ள துன் டாக்டர் ச.சாமிவேலு அறிவியல் கூட மேம்பாட்டிற்கு அதன் மேலாளர் வாரியத் தலைவர் ஆறுமுகத்தின் வேண்டுகோளிற்கு இணங்க ம.இ.கா. இந்த நடவடிக்கையை மேற்கொண்டது என்று மஇகா தேசிய தலைவருமான விக்னேஸ்வரன் குமரியிடம் தெரிவித்தார்.

பள்ளிக்கு நேரில் சென்று இந்த நிதியை அளித்த விக்னேஸ்வரன், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து பள்ளி வளாகத்தையும் சுற்றிப் பார்த்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது ம.இ.கா. சிலாங்கூர் மாநிலத் தலைவர் டத்தோ சங்கர ராஜ், மஇகா தேசிய ஊடகப் பிரிவு தலைவரும் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினருமான எல் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.


