
கோலாலம்பூர் ஏப்ரல் 27-
தோட்டப் பாட்டாளிக்கு மகனாகப் பிறந்து தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்குத் தொண்டாற்றியவர் கல்வியாளர் நாராயணசாமி.
கடந்த ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி இவர் மரணமடைந்தார்.
நாட்டில் புகழ்பெற்ற கல்வியாளராக வலம்வந்த நாராயணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் இன்று பிரிக்ஃபீல்ட்ஸ் இந்திய தூதரகத்தின் கலை கலாச்சார மையத்தில் நடைபெற்றது.
மலேசியத் தமிழ் அறவாரியம், கோலகிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், உமா பதிப்பகம், கோபியோ ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற இந்த நினைவேந்தல் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்தியத் தூதரகத்தின் முதல் நிலை செயலாளர் ராஜேஷ், கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ‘ஸ்பான்’ அமைப்பின் தலைவருமான சார்லஸ் சந்தியாகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்க் காப்பகத்தின் துணைத் தலைவர் டாக்டர் செல்வஜோதி ராமலிங்கம், மலேசியத் தமிழ் அறவாரியத் தலைவர் சுப்பிரமணியம் ராகவன், கோபியோ செயலாளர் ரவீந்திரன், கோலக் கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத் தலைவர் பூவரசன், இந்தியத் தூதரகத்தின் முதல் நிலை செயலாளர் ராஜேஷ் ஆகியோர் கல்வியாளர் நாராயணசாமி அவர்களின் தமிழ் தொண்டு சேவையை பாராட்டி நினைவு கூர்ந்தனர்.
தமிழோடு வாழ்ந்து தொண்டாற்றிய இவரின் சேவை, எப்போதும் வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் என்று அவர்கள் புகழாரம் சூட்டினர்.

அரசாங்க ஊழியராக இருந்தாலும் துணிச்சலாக பல போராட்டங்களில் பங்கேற்றவர் என்று குணசேகரன் கந்தசாமி தன் உரையில் சுட்டிக் காட்டினார்.
இவரின் ஈடற்ற சமூக பணிகள் போற்றுதலுக்குரியது. அவர் நம்மை விட்டு பிரிந்தாலும் அவர் என்றும் நம்மோடு இணைந்திருப்பார் என்று சார்லஸ் சந்தியாகோ சுட்டிக் காட்டினார்.
இந்த நிகழ்வில் நல்லாசிரியர் நாராயணசாமி நினைவாக மலரும் வெளியிடப்பட்டது .


