
கோலாலம்பூர் மே 1-
உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்பு மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும் தொழிலாளர்களின் உரிமை மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்தும விதமாகவும் ஆண்டுதோறும் மே 1ஆம் தேதியன்று சர்வதேச தொழிலாளர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நெற்றி வியர்வையினை சிந்தி தாம் வாழும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கின்ற தொழிலாளர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த நிலையில் உழைப்பின் மேன்மையினையும் உழைப்பாளர் களின் சிறப்பினையும் உலகிற்கு உணர்த்தும் வண்ணம், உழைப்பாளர் தினத்தை உவகையோடு கொண்டாடி மகிழும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்து தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்”.
உழைப்பும் அர்ப்பணிப்புமே நம் நாட்டைக் கட்டமைக்கிறது. உழைப்பே உயர்வு தரும்; மனநிறைவையும் தரும்.
ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு தொழிலாளர்கள் தினமும் வியர்வை சிந்தி உழைக்கிறார்கள்.
கடந்த 1886 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் நாளில் சிக்காகோ நகரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றுகூடி 8:00 மணி நேர வேலை என்னும் வரையறை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மே 1 தொழிலாளர் தினமாகும் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்வோம்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அந்த நாட்டில் உள்ள உழைக்கும் வர்க்கத்தினரின் அர்ப்பணிப்பும் தேச சிந்தனையும் இன்றியமையாததுஎன்று அவர் சொன்னார்.


