
இந்து வழிபாட்டுத்தலங்களை சட்டவிரோத ஆலயங்கள் எனக் கூறுவதை நிறுத்த வேண்டும் என்று மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் வலியுறுத்தினார்.
பத்துமலை திருத்தலத்தில் இன்று கந்த சஷ்டி கவசப் பாராயண விழா நடைபெற்றது.
கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் ஆதரவுடனும் அதன் தலைவர் டான்ஶ்ரீ ஆர். நடராஜா தலைமையிலும் இவ்விழா நடைபெற்றது.
மஹிமா அமைப்பும் டிஎஸ்கே குழுமமும் இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தன.
இன்று, தொழிலாளர் தினம் என்பதால், இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கந்த சஷ்டி கவசப் பாராயண நிகழ்வை எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக நடத்த ஆவண செய்யப்படும் என்று முன்னதாக டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.
நாட்டில் உள்ள இந்து வழிபாட்டுத் தலங்களை சட்டவிரோத கோயில் எனக் கூறி இந்துக்களின் மனதை புண்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதை தவிர்க்க வேண்டும் என்று மகிமா சமய அமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்வதாக சிவக்குமார் தெரிவித்தார்.
பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால் ஆலயங்களின் நிலப்பட்டா பிரச்சினைக்கு தீர்வுகாண, அனைவரும் குரல் எழுப்புவதற்கு இது பொருத்தமான நேரம். எனவே இந்திய பிரதிநிதிகள் அனைவரிடமும் இதன் தொடர்பில் கோரிக்கை வைக்க வேண்டும்
ஏதும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் வரும் பொதுத் தேர்தலில் மக்களால் என்ன செய்ய முடியும் என்பதை வாக்குச்சீட்டு மூலம் தீர்ப்பு எழுதுங்கள் என்றும்
டத்தோ சிவக்குமார் கூறினார்.


