
பத்து மலை, மே 1-
மலேசிய இந்து யாத்திரை கூட்டுறவு சங்கத்தின் 29ஆம் ஆண்டு பேராளர் மாநாடு இன்று காலையில் பத்துமலை ஷங்கா மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் பாலசுந்தரம் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
உறுப்பினர்கள் தேவையை பூர்த்தி செய்ய பயனீட்டாளர் கூட்டுறவுவழி கடன் பெற்று தந்துள்ளோம். மேலும் மலேசிய இந்து யாத்திரை கூட்டுறவு சங்கம் கடந்த ஆண்டு 13,80,000 வெள்ளியை பயனீட்டாளர் கூட்டுறவில் பங்கு தொகையை உறுப்பினர்கள் முதலீட்டோடு அதிகரித்தது என்று கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பாலசுந்தரம் குமாரசாமி தெரிவித்தார்.
இதன் மூலம் கடந்த ஆண்டுக்கான பங்கு மூலதனத்திற்கு ( மொத்த பங்கு 16,30,000) 15% விழுக்காடு இலாப ஈவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதன்வழி உறுப்பினர்கள் பயன் பெறுவார்கள் என்று அவர் சொன்னார்.
தற்போது 2,143 உறுப்பினர்கள் மலேசிய இந்து யாத்திரை கூட்டுறவு சங்கத்தில் பதிவு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு உறுப்பினர்களுக்கு பத்து விழுக்காடு லாப ஈவு வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
மலேசிய இந்து யாத்திரை கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் நலன் கருதி மரணம் அடையும் உறுப்பினர்கள் குடும்பத்திற்கு 500 வெள்ளி மரண சகாய நிதி, எஸ்பிஎம் தேர்வில் 7ஏ மேல் பெறும் உறுப்பினர்கள் பிள்ளைகளுக்கு 300 வெள்ளி, எஸ்டிபிஎம் தேர்வில் சிறப்பு பெறும் மாணவர்களுக்கு 350 வெள்ளி, இயற்கை பேரிடரில் பாதிக்கப்படும் உறுப்பினர்களுக்கு 500 வெள்ளி மற்றும் திருமணம் செய்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு 500 வெள்ளியும் வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

சமயம் வளர கூட்டுறவு கழகங்களின் பங்களிப்பு என்ன என்ற தலைப்பில் கட்டுரை எழுதும் போட்டியில் பவித்ரா முனியாண்டி முதல் நிலையில் வெற்றி பெற்று 500 வெள்ளி பரிசுத் தொகையை பெற்றார்.
பூவதி குப்புசாமி இரண்டாம் நிலையில் வெற்றி பெற்று 300 வெள்ளியும் கவிதா ராமசாமி 200 வெள்ளியும் தீரன், ஆறுமுகம் ஆகியோர் தலா 100 வெள்ளியும் பெற்றனர்.
முருகன், குணவதி ஆகியோர் தலா 50 வெள்ளி பெற்றனர்.
மலேசிய இந்து யாத்திரை கூட்டுறவு சங்கத்தின் பொதுச் செயலாளர் லெட்சுமணன் பொன்னன் வரவேற்புரை யோடு இந்த மாநாடு தொடங்கியது.


