
கோம்பாக் மாவட்ட செந்தமிழ் விழா-2025, நேற்று பத்துமலை தமிழ்ப் பள்ளி வளாகத்தில் கோலாகலமாக தொடங்கியது.
பத்துமலை தமிழ்ப் பள்ளி ஒருங்கிணைப்பில் குவாங் தமிழ்ப் பள்ளி, பத்து ஆராங் தமிழ் பள்ளி, ரவாங் தமிழ்ப் பள்ளி, சுங்கை பூலோ சரஸ்வதி தமிழ்ப் பள்ளி, தாமான் மெலாவாத்தி தமிழ்ப் பள்ளி, புக்கிட் டாரா தமிழ் பள்ளி ஆகியவை இணைந்து இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளன.
திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதை ஒப்புவிக்கும் போட்டி, கதை சொல்லும் போட்டி ஆகியன இடம்பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் பத்துமலை தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் செ.சரஸ்வதி தலைமை உரை ஆற்றினார்.

பத்துமலை தமிழ்ப் பள்ளியின் ஆறாம் ஆண்டு மாணவர்கள் படைத்த இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநில கல்வித்துறை தமிழ் மொழி உதவி இயக்குனர் வீ. செங்குட்டுவன் சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து திறப்புரை ஆற்றிய கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலரும் மஹிமா இயக்கத் தலைவருமான டத்தோ ந.சிவகுமார், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு துணை நிற்கக்கூடிய இத்தகைய நிகழ்ச்சிகள் வரவேற்கப்பட வேண்டும் என்றார்

இந்த நிகழ்ச்சி தொடர்பில் பத்துமலை தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி, மிகப் பெரிய அளவில் பங்களிப்பு வழங்கி இருப்பதை நேரில் கண்டதாகவும் மாணவர்களின் கல்வி ஆற்றலையும் மொழிப் பற்றையும் வளர்க்கும் இந்த நிகழ்ச்சிக்காக உறுதுணையாக இருக்கின்ற ஆசிரியப் பெருமக்களுக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் மொழி- கல்வித் திறனை வெளிப்படுத்துகின்ற மாணவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்றார்.

மாவட்ட அளவில் நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்வித்துறை நிதி வழங்கினால் நல்லது என்றும் அதை கல்வித்துறை அதிகாரி வீ. செங்குட்டுவன் மூலமாக முன்வைப்பதாகவும் தெரிவித்த சிவக்குமார் இந்த நிகழ்ச்சி செம்மையாக நடைபெறுவதற்கு வெள்ளி 10,000 கொடை அளிப்பதாக அறிவித்தார்.


