
ஐம்பது ஆண்டுகளுக்கும்மேல் பொதுவாழ்வில் தன்னை இணைத்துக்கொண்டு அரும்பணி ஆற்றிய அருமை நண்பர் பொன். சின்னையாவின் மறைவுச் செய்தி அறிந்து வருந்துவதாக தான்ஸ்ரீ க.குமரன் இன்று தெரிவித்தார்.
மலேசிய திராவிடர்க் கழகத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவராக கொள்கைப் பிடிப்புடன் சேவையாற்றியவர் பொன் சின்னையா.
பகுத்தறிவு சித்தாந்தத்திலும் சீர்திருத்த கொள்கையிலும், தன்னை இணைத்துக்கொண்டு பொது வாழ்க்கையில் பயணம் மேற்கொண்டவர்;
வேறு அமைப்பில் உறுப்பியம் பெற்றிருந்தாலும் தன் கருத்தை துணிச்சலுடன் முன்வைக்கக் கூடிய தொண்டராக கடைசிமூச்சுவரை வாழ்ந்தவர் சின்னையா.
தன் வாழ்நாளில் பல பட்டங்களையும் பதவிகளையும் பெற்றவர்களால்கூட செய்ய முடியாததை தனி ஒருவராக நின்று வரலாற்றுப் பணியை தனது காலத்தில் செய்துள்ளார்.
ம.இ.கா.வின் மேனாள் தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ கோ.பழனிவேலுவுடனான நட்பின் காரணமாக லாபிசில் மின் சுடலையை நிர்மாணித்தது மாபெரும் செயலாகும். இந்த காலக் கட்டத்தில் மிக நெருக்கமாக மின்சுடலை நடவடிக்கை குறித்து தன்னுடன் பேசுவார்.
அறுபதாம்- எழுபதாம் ஆண்டுகளில் சமுதாயத்துடன் இணைந்து சேவையாற்றிய எங்களைப் போன்ற தொண்டர்கள், தலைவர்கள் மூப்பின் காரணமாக ஒவ்வொருவராக போய்க் கொண்டிருக்கிறோம். பொன். சின்னையா குறித்து மேலும் கூறிய தான்ஸ்ரீ ஒரு சாதாரண மனிதராக சமூக அமைப்புகளில் பங்குபெற்று அவர் நடத்திய போராட்டங்கள் பலருக்குத் தெரியாவிட்டாலும், நண்பர் ரெ.சு.முத்தையா போன்றவர்களுக்கு நன்கு தெரியும்.
1946-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட திராவிடர் கழகத்தின்வழி, எத்தகைய எதிர்பார்ப்புமின்றி பொன்.சின்னையா போன்ற தன்மானத் தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றினை சேகரித்து தொகுக்கும் முயற்சியில் திராவிடர் கழகம் ஈடுபடவேண்டும்.
அதுவே பின்னாளில் தமிழ்ச் சமுதாயத்தின் வரலாறாக நிலைத்து நிற்கும்.
நண்பர் பொன்.சின்னையா அவர்கள் தம் வாழ்நாளில் வரலாற்றில் இடம் பெறக்கூடிய தொண்டினை இந்த சமுதாயத்திற்கு நிறையவே செய்திருக்கிறார் என்பதை பெருமையுடன் நினைவுகூர்ந்து அவரின் குடும்பத்திற்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக தான்ஸ்ரீ குமரன் மேலும் கூறினார்.



ஆழ்ந்த இரங்கலை கழகத் தோழர்களுக்கும், குடும்ப உறவுகளுக்கும் ,நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்…..வீர வணக்கங்கள்…..