
எஸ்பிஎம், எஸ்டிபிஎம், மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் சிறந்த அடைவுநிலையுடன் தேர்ச்சிபெறும் இந்திய ஏழை மாணவர்களின் உயர்க்கல்விப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் UPU என்னும் பல்கலைக்கழக நடுவத்தில் இந்திய கல்விமான்கள், சமூக அக்கறையாளர் போன்றோரும் இடம்பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மஇகா உதவித் தலைவரும் கல்விக் குழுத் தலைவருமான டத்தோ நெல்சன் ரெங்கநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மஇகா கல்விக் குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றபோது, இந்திய சமுதாயத்தின் கல்வி குறித்து பல முக்கிய விவகாரங்கள் பேசப்பட்டன.
குறிப்பாக எஸ்டிபிஎம், மெட்ரிகுலேசன் முடித்த மாணவர்கள் அரசப் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காத புகார்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இம்முறை எஸ்டிபிஎம், மெட்ரிகுலேசன் தேற்வுகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குகூட அரசாங்க பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்தால் வேறு துறையில் பயில வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
பல்கலைக்கழக நடுவத்தின் அதிகாரிகளே தனியார் பல்கலைக்கழகங்களை அடையாளம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது; இது நம் இந்திய மாணவர்களுக்கு பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
பொருளாதார வசதி இல்லாததால் மாணவர்கள் சிரமப்பட்டு படித்து அரசு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பம் செய்கின்றனர்; அங்கும் தங்கள் கனவை அடைவதற்கு முட்டுக் கட்டைஏற்படுத்தினால், அம்மாணவர்கள் என்ன செய்வார்கள் என்பதுதான் மிகப் பெரிய கேள்விக் குறியாக உள்ளது.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் வாயிலாக மஇகா-வின் கல்விக்கரமான எம்.ஐ.இ.டி., பல மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்புத் தருகிறது.
ஆனாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்குத்தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்.
எனவே, அரசாங்க பல்கலைக்கழகங்கள் தகுதியுள்ள மாணவர்களுக்கு உரிய வாய்ப்பை வழங்க வேண்டும். மாணவர்கள் தேர்வு செய்யும் துறைகள் வழங்கப்பட வேண்டும். இதற்கு மடானி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் தொடர்பில் பல்கலைக்கழக நடுவத்தில் இந்தியக் கல்வியாளர்களும் இடம்பெற்றால், இதுபோன்ற சிக்கலுக்கு ஓரளவேனும் தீர்வு கிடைக்கும் என்றும் நம்புவதாக மேநாள் செனட்டருமான ரெ.நெல்சன் மேலும் தெரிவித்துள்ளார்.


