
மின்னல் பண்பலை வானொலியில் ஞாயிறு தோறும் காலை 10:15 முதல் 11:00 மணி வரை முக்கால் மணி நேரத்திற்கு ஒலிபரப்பாகும் அமுதே தமிழே இலக்கிய நிகழ்வில் காலம் காலமாக ஏதோ ஒரு வகையில் சமய கருத்து இடைச்செறுகப்பட்ட நிலை தொடர்ந்தது.
செம்மொழி என்னும் தகுதிக்கு வரையறுக்க பட்ட 11 தொகுதிகளையும் செம்மாந்து பெற்ற ஒரே மொழி உலகில் தமிழ் மொழி மட்டுமே. இத்தகைய மொழியின் தொன்மை, முன்மை மேன்மை என பாராட்டவும் பாராட்டாவிட்டாலும் உள்ளதை உள்ளபடி சொல்லவும் எத்தனையோ கருத்துக்கள் கடல் போல இருக்கின்ற நிலையில் வாரத்திற்கு 45 நிமிடங்களுக்கு மட்டும் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியையும் விட்டு வைக்காமல் ஏதோ ஒரு வகையில் சமய கருத்து இடம் பெற்று வந்தது குறித்து இத்தனைக் காலமும் மின்னல் பண்பலை வானொலிக்கு நிர்வாகியாக வந்தோரும் அந்த நிகழ்ச்சியைத் தயாரித்து படைத்த அறிவிப்பாளர்களும் அக்கறையற்று இருந்தனர்.
இத்தகைய போக்கில் நல்வாய்ப்பாகவும் விலக்காகவும் ரோகிணி தலைமைக் காலம் அமைந்தது.
சு.ரோகிணி மின்னல் பண்பலை வானொலிக்கு நிருவாகியாக இருந்த காலம் வரை சமயக் கலப்பு இல்லாமல் முற்றும் முழுதாக தமிழிய- தமிழ்மொழி சார்ந்த கருத்துக்கள் மட்டுமே எடுத்தியம்பப்பட்டன.

இதற்கு ஏதுவாக அமுதே தமிழே இலக்கிய நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் அங்காசாபுரி மின்னல் வட்டாரத்தில் ‘புவீ’ என்று செல்லமாக அழைக்கப்படும் புவனா வீர மோகன் மிக அற்புதமாக சமயக் கலப்பு இல்லாமல் தமிழ் மொழியின் இலக்கண- இலக்கியப் பெருமையுடன் தமிழின் சிறப்பையும் பறைசாற்றும் வகையில் ‘அமுதே தமிழே’ இலக்கிய நிகழ்ச்சியை படைத்து வந்ததற்கு மலேசியத் தமிழ் இலக்கிய உலகை சார்ந்த அனைவரும் பாராட்டுவர் என்பது திண்ணத்திலும் திண்ணம்!
தற்பொழுது மின்னல் பண்பலை வானொலிக்கு தலைமை மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சமூகப்பாங்காளர் குமரனும் அமுதே தமிழே இலக்கிய நிகழ்ச்சி விடயத்தில் ரோகினியை பின்பற்றுவார் என்று எதிர்பார்ப்போம்.

அமுதே தமிழே இலக்கிய நிகழ்ச்சியைத் தொடர்ந்து தயாரிப்பதிலும் ஒலிபரப்புவதிலும் புவனா வீரமோகனே தொடர்ந்து நியமிக்கப்பட வேண்டும் என்பதையும் குமரி வான் முற்றத்தின் சார்பில் பரிந்துரை செய்யப்படுகிறது.


