
-நக்கீரன்
கோலாலம்பூர், டிச.03:
மலேசிய இந்தியர் முன்னேற்ற முன்னணி-ஐபிஎஃப் கட்சியின் 34-ஆவது தேசியப் பேராளர் மாநாடு வரும் 15-ஆம் நாள் எழுச்சியுடன் நடைபெற இருப்பதாக அதன் பொதுச் செயலாளர் மோகன் முத்துசாமி அறிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் ஐபிஎஃப் தேசிய தலைமையகமான ‘விஸ்மா ஐபிஎஃப்’-இல் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய மு.மோகன், அண்மைக் காலமாக ஐபிஎஃப் கட்சியில் சற்று தொய்வு நிலை இருப்பது உண்மைதான் என்றாலும், விரைவில் நடைபெறவிருக்கின்ற பேராளர் மாநாடு கட்சியில் புத்தெழுச்சியையும் உத்வேகத்தையும் நிச்சயம் ஏற்படுத்தும் என்றார்.
இந்த மாநாட்டை நாட்டின் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாஹிட் ஹமிடி அதிகாரப்படி தொடங்கி வைப்பார் என்றும் மாநாடு காலை 10:00 மணி அளவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். தவிர, மஇகா உள்ளிட்ட தேசிய முன்னணி உறுப்புக்கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருப்பதாகவும் எந்தெந்த தலைவர்கள் வருகின்றனர் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
தேசிய முன்னணி இணைந்துள்ள நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் முக்கிய கட்சித் தலைவர்களும் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்படுவார்கள். இந்த மாநாடு, பாங்கி Avenue Convention Center-இல் நடைபெறும்
1990-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் நாளில், ஐபிஎஃப் நிருவனத் தலைவர் டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதனால் தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, டத்தோ மு.சம்பந்தன், தலைமையில் தொடர்ந்து, தற்போது டத்தோ லோகநாதன் தலைமையில் தொடர்கிறது.
மலேசிய இந்திய சமுதாயத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பதில் ஐபிஎஃப் ஒருகாலும் பின்வாங்கியதில்லை என்று குறிப்பிட்ட மோகன், தேசிய முன்னணியில் உறுப்பியம் பெறுவதற்கான முயற்சி தொடரும் என்றும் குறிப்பிட்டார்.
கட்சியில் இருந்து விலகி இருக்கும் தலைவர்களும் உறுப்பினர்களும் மீண்டும் ஐபிஎஃப்-இல் இணைவதில் எந்தச் சிக்கலும் இல்லை; ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் கட்சி விதிமுறைகளுக்கு ஏற்ப முறையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
புதிய கிளைகளைத் தொடங்க விரும்புபவர்கள், முதலில் சம்பந்தப்பட்ட தொகுதி தலைவர்களின் ஆலோசனையைப் பெற்று, அவர்களின் ஒப்புதலுடன் புதிய கிளைகளைத் தொடங்க வேண்டும். அதன்பின், மாநிலத் தலைமை, அடுத்து தேசியத் தலைமையைத் தொடர்புகொள்ள வேண்டும். இவற்றைத் தவிர்த்துவிட்டு, தேசியத் தலைமையுடன் நேரடித் தொடர்புகொள்ள விரும்புவது பொருத்தமல்ல; அதற்கு கட்சி விதிமுறையும் இடம்தராது. எனவே, கட்சியின் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு முறையாக இணைய விரும்பும் அனைவரையும் மனமுவந்து வரவேற்பதாக மோகன் கூறினர்.
இந்த செய்தியாளார்க் கூட்டம் ஐபிஎஃப் தேசியத் தலைவர் டத்தோ லோகநாதன் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது; தேசிய பேராளர் மாநாட்டு ஏற்பாடு தொடர்பான முக்கிய பணியின் காரணமாக தவிர்க்க முடியாத சுழலில் அவரால் வரமுடியவில்லை என்றும் செய்தியாளர்களிட்ம தெரிவித்தார் மோகன்.


