
தெலுக் இந்தான் பாத்தாக் இராப்பிட் தமிழ்ப்பள்ளியில் மாணவர்க்கான தன்னூக்கப் பயிலரங்கு சிறப்புற நடைபெற்றது. இரு தினங்களுக்குமுன் பள்ளியின் தலைமையாசிரியர் தமிழ்த்திரு குமரன் தலைமையேற்று தொடக்க உரை நிகழ்த்தினார்.
மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர்-எழுச்சித்தமிழர்-தமிழறிஞர் இரா.திருமாவளவன், அந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான தன்னூக்க உரை ஆற்றினார். “தம்மை விரும்பும் பிள்ளைகள் .. தாம் எவ்வகைத் தீமையையும் யார்க்கும் செய்ய மாட்டார்கள்.. அறம் சார்ந்த மன மிக்கவரே உலகம் வாழ வாழ்வர்.. மாணவர்கள் எண்ணிய நல்லெண்ணங்களை, வாழ்வின் உயரும் நோக்கங்களை நன்கு திட்டமிட்டுச் செயற்படுத்துதல் வேண்டும்” என்று அவ்வுரையின்போது குறிப்பிட்டார்.

வாழ்க்கையில் வெற்றியை நோக்கிச் செல்கையில் வெல்விளிகள் பலவற்றை எதிர்நோக்கி அவற்றைக் கடந்து செல்ல வேண்டும். கல்வியைச் சார்ந்தும் தொழிலைச் சார்ந்தும் தன்னொழுக்கஞ் சார்ந்தும் ஆக்கமான குறிக்கோளைக் கட்டமைத்துக் கொள்ளல் வேண்டும். எனப் பல்வேறு விளக்கங்களையும் கூறி பல்வேறு தன்னூக்க நடவடிக்கைகளையும் வழங்கி பயிலரங்கினை வழிநடத்தினார்.
பிற்பகலில் ஆசிரியர்களுக்குத் தமிழ்மொழி கட்டமைப்பு தொடர்பாகவும் வேர்ச்சொல்லியலின் அடிப்படை விளக்கங்களையும் வழங்கினார். முச்சுட்டடி வேர் நுட்பங்களைப் பற்றியும் பல்வேறு கலைச்சொல் ஆக்கங்கள் குறித்தும் விளக்கம் தந்தார்.

தலைமையாசிரியர் குமரன், ஆசிரியர்க்கான பயிலரங்கிற்குத் தலைமையேற்று உரை நிகழ்த்தியதுடன் விரைவில் தமிழ்மொழியின் கட்டமைப்பினை ஆழமாக அறிந்திட ஆசிரியர்களுக்குத் தொல்காப்பிய வகுப்பு நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.


