
மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் தமிழ்ச் சைவ சமயச் சொற்பொழிவு நாளை ஞாயிற்றுக் கிழமை டிசம்பர் 08-ஆம் நாள் கோலாலம்பூர், துன் சம்பந்தன் மாளிகையில் உள்ள டான்சிறி சோமா அரங்கில், காலை மணி 9.30 அளவில் நடைபெறவுள்ளது.
தமிழரும் தமிழர்தம் நிலமும் மாற்றார் ஆட்சியில் இருந்த கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் ஏறக்குறைய 10-ஆம் நூற்றாண்டுவரை தமிழைத் தற்காத்து தமிழருக்கான தமிழிய வழிபாட்டு முறையாம் சைவ நெறியையும் ஒருசேர தற்காத்து, வளர்த்து, நிலைநிறுத்திய சமயம்-ஆன்மிக நெறி, சமய நெறியாகும்.
பரிகாரத்திற்கு இடமில்லாமல் தொண்டறத்தைப் போற்றி, தூய உள்ளத்துடன் ‘அம்மையே-அப்பா’ என்று அழைத்த அடியார்முன் தோன்றி பரம்பொருளான சிவபெருமான் காட்சிதந்த வரலாறெல்லாம், சைவ சமத்திற்கே உரிய ஆன்மிக மேன்மையாகும்.
அத்தகைய சிவநெறிசார் மேன்மை, சைவ நெறியின் உன்னதம் குறித்தெல்லாம் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் சார்பில் தமிழியக் கூறுகள் மிளிர, சைவம் தழைக்க சொற்பெருக்காற்றி வருகிறார், அதன் தலைவர் ‘சிவநெறி செம்மல்’ ந.தர்மலிங்கனார்.
இம்முறையும் முனைவர் தர்மலிங்கம் நடராசன், திருஞானசம்பந்தரின் ‘திருக்கடைக்காப்புச் செய்திகள் 2-ஆம் பகுதி’ என்னும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார். தவிர, சிவநேயச் செல்வி அகல்யா தர்மலிங்கம், திருமுறைத் திருமணம் எனும் தலைப்பில் மற்றொரு உரை நிகழ்த்துவார்.
அரிய சமய உண்மைகளையும் தமிழர்தம் வாழ்வியல் கூறுகளையும் அறிவதற்கும் அதனைப் பின்பற்றுவதற்கும் அவற்றை எதிர்காலத் தலைமுறையினருக்குக் கடத்தவும் இந்நிகழ்ச்சி வழிகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை!
சிந்தனைக்கும் செயலுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய இந்நிகழ்ச்சியில் தமிழ்ச் சைவ சமய ஆர்வலர்கள் தமிழர் பண்பாட்டு உடையோடு தங்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு பயன் அடைய அழைக்கப்படுகின்றனர். கட்டணமின்றி நடத்தப்பெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அன்பர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படும்.
கூடுதல் தெரிவலுக்கு 012-3277061 அல்லது 012-2340470 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் தொடர்புக்கு darmamsnk@yahoo.com.


