
கோலாலம்பூர், டிச.19:
மெர்டேக்கா காலத்தில் நாட்டின் பொருளாதர மேம்பாட்டிற்கு அடிப்படையாக இருந்தது தோட்டத் தொழில்தான். குறிப்பாக, இந்திய தோட்டப் பாட்டாளிகள் சிந்திய வியர்வையும் இரத்தமும்தான் இதற்கான ஆதாரம் என்பது இன்றைய இளைய சமுதாயத்திற்கும் உயர்க்கல்வி மாணவர்களுக்கும் தெரிவிக்கப்படாமல் இரட்டடிப்பு செய்யப்படுவது ஒருபுறம் இருக்க, அப்படிப்பட்ட இந்திய சமுதாயம் தேசிய பொருளாதார மேம்பாட்டில் பங்குபெற முடியாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது மிகவும் கவலை அளிக்கக்கூடியது.

மலேசிய மேம்பாட்டிற்காக இதுவரை வரையப்பட்ட 12 திட்டங்களும் இப்படித்தான் கடந்து சென்றன. அதனால், அடுத்த 13-ஆவது மலேசியத் திட்டத்திலாவது நலிந்த இந்திய சமுதாய மீட்சிக்காக சிறப்புத் திட்டங்கள் வரையப்பட வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசிய பொருளாளர் சி.மணிமாறன் மடானி அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
2025 அக்டோபர் மாதத்தில், 13-ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிவிக்க இருக்கிறார். அதில், மலேசிய இந்தியர்களின் சமூக-பொருளாதார மீட்சிக்காக சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படுவதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும் என்றும் எம்ஏபி சிலாங்கூர் மாநில உதவி தலைவருமான சி.மணிமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.


