
மலேசியாவின் மனித உரிமை அமைப்பான ஹிண்ட்ராஃப், 1966 சங்கப் பதிவகச் சட்டம், பிரிவு 13 (1) (c) (iv) ஆனது, அரசியலமைப்புச் சட்டப்படி ஏற்புடையதா என்று கேள்விக்குட்படுத்தும் ஒரு முக்கியமான சட்ட சவாலை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று 2025, ஜனவரி 2, வியாழன் காலை 11:00 மணி அளவில் முன்வைக்க உள்ளது என்று ஹிண்ட்ராஃப் சட்ட ஆலோசகர் கார்த்திகேசன் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு மலேசியாவில் உள்ள சிவில் சமூகத்திற்கும் அமைப்புகளின் நிர்வாகத்திற்கும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. சங்கப் பதிவகம்-ROSஇன் நடவடிக்கைகள், அடிக்கடி அதன் சட்ட விதிகளை மீறுவதாக உள்ளது; இதன் விளைவாக, எண்ணற்ற சமூக அமைப்புகள் அற்பமான காரணங்களுக்காக பதிவு ரத்திற்கு ஆளாகின்றன. ஹிண்ட்ராஃப்-இன் இந்த சட்டப் போராட்டம் வெற்றிபெற்றால், மலேசியாவில் உள்ள மற்ற சமூக அமைப்புகளுக்கு அது ஒரு முன்மாதிரியாக அமையும். தவிர, 58 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள பழமையான சட்டம் இது என்பதுடன் பெரும்பாலும் கூட்டரசு நீதிமன்றத்தை சார்ந்திருக்கிறது.
எனவே, சரித்திர சாதனைக்குரிய ஹிண்ட்ராஃப் இயக்கம் மேற்கொண்டுள்ள இந்த சட்ட முன்னெடுப்பு குறித்து அனைத்துத் தரப்பினரும் பொதுமக்களும் கருத்தில் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளும் அதேவேளை, மேல் விவரத்திற்கு தன்னுடன் தொடர்புகொள்ளலாம்(017-5938085) என்றும் மனித உரிமை வழக்கறிஞருமான கார்த்திகேசன் சண்முகம் தெரிவித்துள்ளார்.


